
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசின் முதல் விவசாய பட்ஜெட் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட் ஒன்றுமில்லாத பட்ஜெட் என்று கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவர் கூறியதாவது: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவியது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் முற்றிலும் பொய்த்துவிட்டது. புதிய சலுகைகள் வழங்கப்படாவிட்டாலும், தேர்தல் வாக்குறுதிகளையாவது நடைமுறைப்படுத்தி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர்.</p>
<p style="text-align: justify;">ஆனால் அதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ரூ.75,000, ரூ.35,000 போன்ற பகுதி கடன் தள்ளுபடி அறிவிப்புகள் போதுமானவை அல்ல. ஒட்டுமொத்த விவசாயக் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து போராடி வருகிறோம்.</p>
<p style="text-align: justify;">தேர்தலின்போது நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை இந்த நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கரும்புக்கும், நெல்லுக்கும் விலை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாதது இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத நிலையாகும். </p>
<p style="text-align: justify;">வழக்கமாக பட்ஜெட்டில் முதலில் நெல், கரும்புக்கான விலை அறிவிக்கப்பட்ட பிறகே மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை அந்த அடிப்படை நடைமுறையே பின்பற்றப்படவில்லை. 2025–26 அறுவடை பருவத்தில் வெட்டப்படும் கரும்புக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டும் கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்துவிட்டது.</p>
<p style="text-align: justify;">மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையை மட்டுமே நம்பி கரும்பு விவசாயிகள் வாழ முடியாது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை மூலமாகவே கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஆதரவும் இல்லாத நிலையில் கரும்பு சாகுபடி செய்வதற்கான ஆர்வமே குறைந்து விட்டது. ஏற்கனவே கரும்பு உற்பத்தி பரப்பளவு கிடுகிடுவென்று குறைந்து வரும் நிலையில் தற்போதைய அரசு ஊக்கத்தொகை அறிவிக்காத நிலை கரும்பு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.</p>
<p style="text-align: justify;">டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் இந்த நிதிநிலை அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். கரும்பு விவசாயிகளை அரசு முழுமையாக புறக்கணித்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு வேளாண் அமைச்சர் திருப்பதி சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்துள்ளார். அதற்கான காரணம் தற்போது தெரிந்து விட்டது. ஒட்டு மொத்த விவசாயிகள் நெற்றியிலும் இந்த அரசு நாமத்தை குழைத்து பூசிவிட்டது. </p>
<p style="text-align: justify;">புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கரும்பு சாகுபடி பரப்பளவு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டிலும் எந்த ஊக்குவிப்பு நடவடிக்கையும் இல்லாததால் எதிர்காலத்தில் கரும்பு பயிரிட விவசாயிகள் தயங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் இதுபோன்ற ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்பட்டதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>
Source: Read Full Article