
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அதன் வெளிப்புறம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களை ஒத்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">அரசு நிதியில் செயல்படும் மக்கள் நலத் திட்டத்துக்கு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொடி நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">ஏழை, எளிய மக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>புதுப்பித்த பிறகே வெடித்த சர்ச்சை</strong></p>
<p style="text-align: justify;">சமீபத்தில் இந்த உணவகம் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், உணவகத்தின் வெளிப்புற சுவர்கள் அடர்ந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளன. இந்த நிறங்கள் நடிகர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களுடன் ஒத்துப்போவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">மேலும், உணவகத்தின் பெயர் பலகையில் இடம்பெற்றுள்ள ‘தஞ்சாவூர் மாநகராட்சி’ மற்றும் ‘அம்மா உணவகம்’ என்ற பெயர்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால், உணவகத்தின் புதுப்பிப்பு அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்ற விவாதம் எழுந்துள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>‘மக்கள் திட்டத்துக்கு கட்சி நிறமா?’</strong></p>
<p style="text-align: justify;">இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “அம்மா உணவகம் என்பது அரசின் மக்கள் நலத் திட்டம். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. அரசு நிதியிலும், அரசு வளாகத்திலும் செயல்படும் உணவகத்துக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடி நிறத்தை ஒத்த வண்ணம் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி</strong></p>
<p style="text-align: justify;">மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். “அம்மா உணவகம் ஏழை மக்களுக்கானதா அல்லது அரசியல் கட்சிகளுக்கானதா? மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் திட்டங்களில் அரசியல் சாயம் தேவையா?” என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p>
<p style="text-align: justify;">மேலும், அரசு நிறுவனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் அரசியல் கட்சிகளின் அடையாளங்களில் இருந்து விலகி, அனைவருக்கும் பொதுவான நடுநிலையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இதையடுத்து, தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக விளக்கம் அளித்து, விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட அம்மா உணவகத்தின் வண்ணம் தற்போது தஞ்சையில் அரசியல் விவாதத்துக்கு மையமாகியுள்ளது. இந்த நிறம் மீண்டும் மாற்றப்படுமா? அல்லது இதே நிறத்துடன்தான் இயங்குமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எழுந்துள்ளது. இதற்கு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட வணே;டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது ஆரம்பிக்கப்பட்டபோது கூட அதிமுக கட்சி கொடி நிறத்தை பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. </p>
Source: Read Full Article