
<p>தமிழ்நாட்டிற்கும் கர்நாடக அரசுக்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீட்டை பிரிப்பதில் பல்வேறு சிக்கல்களும் நெருக்கடிகளும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் இதற்காக அமைக்கப்பட்டும் அதன் உத்தரவை கர்நாடக அரசு பல முறை பின்பற்றத் தவறி வருகிறது. </p>
<h2><strong>உச்சநீதிமன்றத்தில் வழக்கு:</strong></h2>
<p>இந்த நிலையில் தற்போது திறந்துவிட வேண்டிய காவிரி நீரையும் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த சூழலில், கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், காவிரி நீரைத் திறந்துவிடாததை கண்டித்தும் இன்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.</p>
<p>இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,</p>
<h2><strong>கர்நாடகாவிற்கு உத்தரவு:</strong></h2>
<p>28.07.2026ல் நடந்த நடைபெற்ற 139வது கூட்டத்தில் காவிரி நீ்ர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல் வானிலை சூழலை ஆய்வு செய்து, 2907.2026 (காலை 8 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (2907.2026 முதல் 12.08.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. </p>
<p>30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது அவசர கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல் - வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்கு பிறகு, பில்லிகுண்டுலுவில் 29.07.2026 முதல் 02.08.2026 வரை வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கன அடி மட்டுமே ஆகும். </p>
<h2><strong>சிரமம் கிடையாது:</strong></h2>
<p>3 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, கர்நாடகவின் கேஆர்எஸ் அணையில் 23 ஆயிரத்து 078 டிஎம்சி கபினியில் 18.610 டிஎம்சி ஹாரங்கியில், 7.827 டிஎம்சி மொத்த நீர் இருப்பு பயன்பாட்டு நீ்ர் இருப்பு 67.517 டிஎம்சி உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரைத் தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தச் சிரமும் இருக்காது. </p>
<p>இதற்கிடையே கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டிஎம்சி ஆகும். இதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டிஎம்சி மிக குறைவாகும்.</p>
<h2><strong>உச்சநீதிமன்றத்தில் வழக்கு:</strong></h2>
<p>இந்த சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்கத் தவறியதாலும், தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டிஎம்சி என்பதாலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனைப்படி முதலமைச்சர் இன்று உச்சநீதிமன்றத்தை அணுகி தக்க உத்தரவைப் பெற அறிவுறுத்தினார்.</p>
<p>தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை குறித்த காலத்தில் பெறவும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/how-much-time-does-pizza-take-to-digest-269832" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article