
<p>விருதுகளை தவறவிட்ட ‘மெய்யழகன்’... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!</p>
<div dir="auto"><strong>மெய்யழகன் திரைப்படத்திற்கு உரிய விருது வழங்கப்படவில்லை</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மெய்யழகன் திரைப்படத்திற்கு உரிய விருதுகள் வழங்கப்படாததை சுட்டிக்காட்டி, மதுரை மாவட்டம் மேற்கு தொகுதி புரட்சி வீரன் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்பு, மனிதநேயம், உறவுகளின் மேன்மை ஆகியவற்றை எவ்வித ஆரவாரமுமின்றி அழகாகப் பதிவு செய்த மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கார்த்தி, அரவிந்த் சாமியின் இயல்பான நடிப்பு, சி. பிரேம்குமாரின் இயக்கம், கோவிந்த் வசந்தாவின் இசை என படத்தின் பல்வேறு அம்சங்களும் பெரிதும் பாராட்டப்பட்டன.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பேசுபொருளாகியுள்ளது.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இத்தகைய சிறப்புகளைப் பெற்ற திரைப்படத்திற்கு எதிர்பார்த்த விருதுகள் கிடைக்காத நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பேசுபொருளாகியுள்ளது. “விருதுகள் வழங்கப்படாமல் இருக்கலாம்... ஆனால் மக்கள் மனதில் இடம்பிடித்த படைப்பை யாராலும் புறக்கணிக்க முடியாது” என்ற கருத்தை முன்னிறுத்தும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. விருதுகள் என்பது ஒரு திரைப்படத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்றாலும், காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பதே ஒரு படைப்பின் உண்மையான வெற்றி. அந்த வகையில், மெய்யழகன் விருதுகளைத் தவறவிட்டிருக்கலாம்; ஆனால் மக்கள் மனதை வென்ற திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், தற்போது சினிமா ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.</div>
Source: Read Full Article