
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> தஞ்சாவூர் மாவட்டத்தில் 639 ஏக்கர் பரப்பிலான 10 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட பிரமாண்ட பாசன ஏரியாக விளங்கும் கள்ளப்பெரம்பூர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /> <br />தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் அமைந்துள்ளது செங்கழுநீர் ஏரி. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் பொழியும் மழை நீரானது, சிவப்பு நிற மணலில் ஓடி வந்து சேருமிடம் தான், இன்று கள்ளப்பெரம்பூர் ஏரி என்று அழைக்கப்படும் பழமையான செங்கழுநீர் ஏரி. இந்த ஏரி, 639 ஏக்கர் பரப்பளவில், எட்டு மதகுகளையும், இரண்டு வெள்ள நீர் வடிகால்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/02/fc5dc5c2d2393b804ff70ee3f75ccbde1785677418708733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">கள்ளபெரம்பூர்-1, கள்ளபெரம்பூர் - 2, ராயந்துார், சக்கர சாமந்தம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர் ஆகிய கிராமங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் செல்லுகிறது. கல்லணையில் பிரிந்து வரும் வெண்ணாறு, கச்சமங்கலம் அணையில் இருந்து, ஆனந்தகாவிரி வாய்க்கால் வழியாக வழிந்தோடி வருவது தான், இதற்கான நீராதாரம். பரந்து காணப்படும் இந்த கள்ளப் பெரம்பூர் ஏரி மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட மாபெரும் ஏரியாகும்</p>
<p style="text-align: justify;">ஏரியை சுற்றியுள்ள 7 கிராமங்களில் உள்ள 2,662 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்களுக்கு பாசன நீரை சேமித்து வழங்ககூடிய ஏரியில் கருவேல மரங்களும் முட்புதர்களும் மண்டி நீர் சேமிப்பை தடுத்ததால் கள்ளப்பெரம்பூர் பாசன ஏரியை தூர்வாரி அரை டிஎம்சி வரை தண்ணீரை சேமித்திட <br />கிராமத்து இளைஞர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து கள்ளப்பெரம்பூர் கிராமத்து இளைஞர்கள் 20 லட்சம் ரூபாய் நிதி திரட்டி தூர்வார முடிவு செய்து வாட்ஸ்-அப் குழு அமைத்து அதில் 7 கிராமத்து மக்களின் பங்களிப்பை நாடினர். முதலாவதாக தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி ரூ. 1 லட்சம் வழங்கி நிதி திரட்டும் பணியை துவக்கிவைத்தார் இதில் தற்போது வரை 400 பேர் இணைந்து பணமாகவும், சிலர் பொக்லைன் இயந்திரங்களுக்கு டீசலும் வழங்கி வருகின்றனர். </p>
<p style="text-align: justify;">இதையடுத்து ஏரி தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதனை இன்று தஞ்சாவூர் எம்.பி., முரசொலி மற்றும் மாநிலங்களவை எம்.பி, கல்யாணசுந்தரம், திருவையாறு எம்.எல்ஏ, துரை. சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டு இளைஞர் குழுவினரை பாராட்டினர். </p>
<p style="text-align: justify;">பின்னர் மாநிலங்களை எம்.பி., எஸ்.கல்யாணசுந்தரம் கூறுகையில், தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் வறட்சி நிலவும் நிலையில், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளபெரம்பூர் ஏரியை முழுமையாக தூர்வார சுமார் 200 கோடிக்கும் மேல் தேவைப்படும். மத்திய அரசு நிதி ஒதுக்கிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இணைந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளோம் என்றார்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/02/9fc459e889fec5f2245a4540c035b8841785677399775733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">தூர்வாரும் குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், இராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரி.. தண்ணீர் தேக்கி வைத்தால் முழுமையாக 20 கிராமங்களில் சாகுபடி செய்ய முடியும் என்பதால், கிராமத்து இளைஞர்கள், இணைந்து நிதி திரட்டி தூர்வாரி வருகிறோம். இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிராமத்தினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.</p>
<p style="text-align: justify;">சிறப்பான இந்த தூர்வாரும் முயற்சிக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் அதிகரித்து வருகிறது. இந்த ஏரி முழுமையாக தூர்வாரினால் பல நூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் .</p>
Source: Read Full Article