
<p style="text-align: justify;"><strong>நாகப்பட்டினம்: </strong>நீட் (NEET 2026) தேர்வில் தமிழ்நாட்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மு.தினேஷிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமை தாங்கி, மாணவரைப் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கிப் பாராட்டினார்.</p>
<h3 style="text-align: justify;">விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவனின் இமாலய சாதனை</h3>
<p style="text-align: justify;">நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகையன் மற்றும் உமாராணி ஆகியோரின் மகனான மு.தினேஷ், நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் 2026 தேர்வில் பங்கேற்றார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்குப் பெரும் பெருமை சேர்த்துள்ளார்.இச்சாதனையைக் கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.08.2026) சிறப்புப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p>
<h3 style="text-align: justify;">தோல்வியைக் கண்டு தளராத அர்ப்பணிப்பு</h3>
<p style="text-align: justify;">மாணவர் தினேஷின் கல்விப் பயணத்தைக் குறிப்பிட்டுப் பேசிய மாவட்ட ஆட்சியர், அவரது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் வெகுவாகப் பாராட்டினார்.<br />மாணவர் தினேஷ், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பெரியகுத்தகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளை தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளை நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியிலும் பயின்றுள்ளார். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 475 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 554 மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.</p>
<p style="text-align: justify;">கடந்த ஆண்டு எழுதிய நீட் (NEET 2025) தேர்வில் 379 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு கைநழுவியது. இருப்பினும், அந்தத் தோல்வியைக் கண்டு மனம் தளராத தினேஷ், ஒரு ஆண்டு இடைவெளி (Repeat Year) எடுத்து, முழு அர்ப்பணிப்புடன் மீண்டும் தீவிரமாகப் பயின்றார். அதன் பலனாக, நீட் 2026 தேர்வில் தன் மதிப்பெண்ணை 220 மதிப்பெண்கள் உயர்த்தி, 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி உரை</h3>
<p style="text-align: justify;">விழாவில் மாணவரைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் பேசியதாவது: "நாகப்பட்டினம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வேளாங்கன்னி தேவாலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் மற்றும் சுவையான இறால் வடை தான். ஆனால், இனி நாகப்பட்டினம் என்று சொன்னாலே வேதாரண்யம் தாலுக்கா, பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்து மாணவன் தினேஷின் பெயர் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். நேற்றைய தினம் நான் ஆய்வுக் கூட்டத்தில் இருந்த போது, மாணவர் தினேஷ் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்ற நற்செய்தி கிடைத்தது. அதைக்கேட்டவுடன் எனது சொந்தச் சகோதரருக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் கருதி மகிழ்ச்சியடைந்தேன்.</p>
<p style="text-align: justify;">2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நமது மாவட்ட மாதிரிப் பள்ளி, ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலக் கனவை நனவாக்கும் என்பதைக் தினேஷ் தனது சாதிப்பின் மூலம் நிரூபித்துள்ளார். இப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 8 பேரும், 2023-24 இல் 3 பேரும், 2024-25 இல் ஒருவரும் என இதுவரை 12 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது தினேஷின் இந்த வெற்றி மற்ற மாணவர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கத்தையும் முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இனிப்பான வெற்றியைத் தந்த தினேஷிற்கும், அவரது பெற்றோருக்கும், மாதிரிப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.</p>
<h3 style="text-align: justify;">அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்பு</h3>
<p style="text-align: justify;">இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலசந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் வ.பவணந்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சாதனை மாணவரை வாழ்த்தினர்.</p>
Source: Read Full Article