
<h2 dir="ltr"><strong>" மேற்படிப்பு படிக்க விருப்பம் இல்லை "</strong></h2>
<p dir="ltr">கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால் ( வயது 63 ) இவர் முட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி , திருமணமான ஒரு மகள் மற்றும் 26 வயதுடைய ஜினேஷ் மூர்த்தி என்ற மகன் உள்ளார்.</p>
<p>பி.இ. பட்டப் படிப்பை முடித்த ஜினேஷ் மூர்த்தி , தனது தந்தையுடன் இணைந்து குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் , அவர் மேற்படிப்பு தொடர வேண்டும் என பெற்றோர் விருப்பம் தெரிவித்ததாகவும் , ஆனால் அதில் ஜினேஷ் மூர்த்திக்கு விருப்பம் இல்லாததால் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p>இந்த நிலையில் தனது அறைக்குச் சென்று உறங்கிய ஜினேஷ் மூர்த்தி காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளனர்.</p>
<h2><strong>" எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை "</strong></h2>
<p>அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.</p>
<p>ஆனால் , அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜினேஷ் மூர்த்தியின் தந்தை திருமால் அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>விசாரணையின் போது , ஜினேஷ் மூர்த்தி கைப்பட எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், "எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை " பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.</p>
<p>அந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அஞ்சுகிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article