
<p><strong>திருப்பத்தூர்:</strong> நாட்றம்பள்ளி அருகே தொண்டையில் பலூன் சிக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குமார், அவரது மனைவி சத்யா. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தைகள் என ஐந்து பேர் உள்ளனர்.</p>
<p>இந்நிலையில், சோம்நாத் (6),சேஸ்நாத் (6) அண்ணன் தம்பிகளான இரட்டையர்கள் நேற்று இரவு வீட்டில் பலூன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். சோம்நாத் பலூன் ஊதிக் கொண்டிருக்கும்போது, பலூன் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/kOu6psgoZJg?si=mnzXq40JfQG46coK" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p> </p>
<p>இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, உடனே சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.</p>
<p>மேலும், இது குறித்து தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இறந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரோத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p>குழந்தைகள் எதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் மீது கவனம் இருக்க வேண்டும். சிறு பொருட்கள் கூட அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படும் என்பதை உணரவேண்டும். எந்த நேரத்திலும் எது வேண்டுமானலும் நடக்கலாம் என்பதால் பெற்றோர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் குழந்தை நல ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article