60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை

60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
News Image
<p style="text-align: justify;">கும்பகோணம்: சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் பழமையான வெண்கலச் சிலை, சட்டரீதியான தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு லண்டனில் இருந்து மீட்கப்பட்டு, அதன் பூர்வீகமான கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது ஊருக்கும் கோவிலுக்கும் திரும்பிய திருமங்கை ஆழ்வார் சிலைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.</p> <p style="text-align: justify;">தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவிலில் பழமையான உலோகச் சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, 1957 முதல் 1967-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட 4 பழமையான உலோகச் சிலைகள் கோவிலில் இருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/19/a99aeee005797a4580222c0c47da397e1787140712824733_original.jpg" /></p> <p style="text-align: justify;">இதையடுத்து, காணாமல் போன சிலைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், திருமங்கை ஆழ்வாரின் முழு உருவ வெண்கலச் சிலை லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தொடர்பான தகவல்கள் தெரியவந்தன. இதனால் அந்தச் சிலையை மீட்டு மீண்டும் அதன் பூர்வீக கோவிலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.</p> <p style="text-align: justify;">சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சிலையின் வரலாற்றுப் பின்னணி மற்றும் அதன் பூர்வீகம் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, லண்டனில் இருந்த திருமங்கை ஆழ்வார் சிலை மீட்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">மீட்கப்பட்ட சிலை முதற்கட்டமாக லண்டனில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் முதலமைச்சர் சிலையை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, சிலை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. நீதிமன்ற நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், சிலை கும்பகோணம் ராமசாமி கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்பு எந்த கோவிலில் இருந்து காணாமல் போனதோ, அதே சுந்தர பெருமாள் கோவிலுக்கு திருமங்கை ஆழ்வார் சிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சிலை மீண்டும் கோவிலுக்கு திரும்பும் நாளை பக்தர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.</p> <p style="text-align: justify;">இந்த நிலையில், இன்று திருமங்கை ஆழ்வார் சிலை சுந்தர பெருமாள் கோவில் ரயில்வே கேட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிலை வைக்கப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிலைக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.</p> <p style="text-align: justify;">தொடர்ந்து, திருமங்கை ஆழ்வார் சிலை சுந்தர பெருமாள் கோவிலின் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வீதிகளின் இருபுறங்களிலும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது ஊருக்கு திரும்பிய திருமங்கை ஆழ்வாரை பக்தியுடன் தரிசனம் செய்தனர். சிலை ஊர்வலம் நடைபெற்றபோது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது.</p> <p style="text-align: justify;">பின்னர், திருமங்கை ஆழ்வார் சிலை சுந்தர பெருமாள் கோவிலை சென்றடைந்தது. கோவில் வளாகத்தில் சிலைக்கு உரிய புனிதப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பட்டாச்சாரியார்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவிலுக்கு மீண்டும் வந்த திருமங்கை ஆழ்வார் சிலையை பக்தியுடன் வழிபட்டனர்.</p> <p style="text-align: justify;">சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படும் பழமையான சிலை, பல்வேறு சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகு மீண்டும் தனது பூர்வீக கோவிலை வந்தடைந்திருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க சிலை மீண்டும் கோவிலுக்கு வந்திருப்பது சுந்தர பெருமாள் கோவில் பக்தர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.</p> <p style="text-align: justify;">பழமையான கோவில் சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதைத் தடுப்பதோடு, ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தொன்மையான சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை உரிய சட்ட நடைமுறைகள் மூலம் மீட்டு, அவற்றின் பூர்வீக இடங்களுக்கு மீண்டும் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks