
<p style="text-align: justify;"><strong>Travel With ABP:</strong> இன்றைய அவசரமான இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இயங்கும் பன்னாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம் ஏற்படுவது இயல்பாகிவிட்டது. இந்த மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி நாட்களைப் பயனுள்ள வகையில் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு மலையேற்றப் பிரியர்கள் பெரிதும் விரும்பும் இடங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து திகழ்கிறது ஹுத்ரிதுர்கா மலை. ஒரே நாளில் சென்று எளிதாகத் திரும்பிவிடக் கூடிய வகையில் அமைந்துள்ளதால், சாகச விரும்பிகளின் முதன்மைத் தேர்வாக இது மாறியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">அமைவிடமும் மலைப்பாதையின் சிறப்பு அம்சங்களும்</h3>
<p style="text-align: justify;">பெங்களூருக்கு மிக அருகிலுள்ள ராமநகர், கோலார், துமகூரு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான மலையேற்றத் தளங்கள் அமைந்திருந்தாலும், துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியில் உள்ள ஹுத்ரிதுர்கா மிகவும் தனித்துவமானது. குனிகல்லில் இருந்து ராமநகரின் மாகடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இம்மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,747 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மலை அடிவாரத்தில் இருந்து உச்சியை அடையும் வரை மொத்தம் எட்டு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மலையேற்றப் பிரியர்கள் பிரதான நுழைவுவாயில் வழியாகவே சாகசப் பயணத்தைத் தொடர முடியும்.</p>
<h3 style="text-align: justify;">இயற்கை எழிலும் பழமையான திருக்கோவில்களும்</h3>
<p style="text-align: justify;">இம்மலையின் அடிவாரத்தில் ஆதிநாராயண சுவாமி கோவிலும், மலையின் நடுப்பகுதியில் சங்கரேஸ்வரர் கோவிலும் அமையப்பெற்று ஆன்மீக அமைதியை வழங்குகின்றன. இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் இயற்கை சுனைகளும், குளங்களும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. அடிவாரத்தில் இருந்து 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மலையின் உச்சியை சுலபமாக அடைந்துவிடலாம். உச்சியை அடைந்ததும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான கிராமங்களின் எழிலைக் கண்டு ரசிக்கலாம். குறிப்பாக, காலையில் மலையுச்சியைத் தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்களின் அழகையும், மாலையில் கண்களுக்கு விருந்தளிக்கும் சூரிய அஸ்தமனத்தையும் இங்கு மனதார அனுபவிக்க முடியும்.</p>
<h3 style="text-align: justify;">பயணிகள் கவனத்திற்கு மற்றும் வழித்தட விவரங்கள்</h3>
<p style="text-align: justify;">சொந்த வாகனத்தில் செல்வோர் பெங்களூரில் இருந்து 79 கி.மீ. தொலைவிலுள்ள ஹுத்ரிதுர்காவிற்கு சுமுக சாலை வழியாக நெலமங்களா சந்திப்பை அடைய வேண்டும். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து குனிகல் சென்று, மாகடி சாலை வழியாக மலையின் அடிவாரத்தை எட்டலாம். பேருந்து அல்லது ரயிலில் பயணிப்பவர்கள் குனிகல் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அடிவாரத்தை அடைய முடியும்.</p>
<p style="text-align: justify;">சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மலை அடிவாரத்தில் கட்டணத்துடன்கூடிய வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலைக்குச் செல்பவர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் சிறுதீனிகளை கையில் எடுத்துச் செல்வது பயணத்தை மேலும் சிறப்பானதாகவும் வசதியானதாகவும் மாற்றும்.</p>
<h3 style="text-align: justify;">பாதுகாப்புடன் பயணத்தை முடிக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிகாட்டுதல்கள்:</h3>
<p style="text-align: justify;">மலை ஏற்றம் (Trekking) செல்பவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்கப் பல முன்னேற்பாடுகள் அவசியமாகும். பயணத்திற்கு முன் உடற்தகுதியை வளர்ப்பதுடன், வானிலை, வழித்தடம் மற்றும் வனத்துறையின் அனுமதிகளைச் சரிபார்த்துவிட்டு, உங்கள் பயணத் திட்டத்தை குடும்பத்தினரிடம் தெரிவிப்பது அவசியம். பயணத்தின் போது போதுமான குடிநீர், உலர் உணவுகள், முதலுதவி பெட்டி, ஏற்ற காலணிகள், டார்ச் லைட் மற்றும் பவர் பேங்க் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.</p>
<p style="text-align: justify;">மலையேறும்போது அவசரப்படாமல் சீரான வேகத்தில் குழுவாகவே செல்ல வேண்டும்; மூச்சுத்திணறல் அல்லது சோர்வு ஏற்பட்டால் உடனடியாக ஓய்வெடுக்க வேண்டும். பழக்கமில்லாத குறுக்கு வழிகளில் செல்வது, இருட்டிய பின் பயணிப்பது, வனவிலங்குகளை அச்சுறுத்துவது மற்றும் மது அருந்துவது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, பிளாஸ்டிக் கழிவுகளை மலையில் வீசாமல் மீண்டும் கீழே எடுத்து வந்து சேகரிப்பது பொறுப்புள்ள பயணிகளின் கடமையாகும்.</p>
Source: Read Full Article