
<p>விழுப்புரம் : மாநில உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 'மாற்றத்தை நோக்கி' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற நடைபயண பிரச்சார மேற்கொள்வதாக கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி</p>
<p>விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 'மாற்றத்தை நோக்கி' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற நடைபயண பிரச்சார இயக்கத்தை அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் துவக்கி வைத்து நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின் இறுதியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p>
<p>அப்போது அவர் கூறியதாவது:-</p>
<p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு முடிவின்படி ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்களாக பிரச்சார நடைபயண இயக்கத்தை தொடங்கியுள்ளோம். ஒன்றிய அரசு அதிகாரத்தை குவித்துக்கொண்டு மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது. ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியை நிறுவ துடிக்கிறது. நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்து அதிகாரத்தை தக்கவைப்பதற்கான மிக மோசமான, சட்டத்திற்கு புறம்பான முயற்சிகள் நடைபெறுகிறது. இவை அனைத்திற்கும் எதிராக முழங்குகிறோம். விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், ரேஷன் பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டும், போராடி பெற்ற உழைப்பாளி மக்களின் சட்டங்களை சிதைக்க கூடாது, சிறு, குறு தொழிலுக்கு நலவாரியங்கள் அமைக்க வேண்டும், ஏழைகள், தலித் மக்கள், பழங்குடிகள், அலைகுடி மக்கள் வாழ்வுக்காக அரசுகள் நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும்,</p>
<p>கல்வியும் மருத்துவமும் முழுக்க முழுக்க அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை முன்மொழிந்து இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறோம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். செப்டம்பர் 1-ந் தேதி டெல்லியில் பிரமாண்டமான பேரணியை நடத்த உள்ளோம். இதில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். டெல்டா பகுதியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல்லி செல்ல உள்ளோம். இந்த நடைபயண இயக்கம் ஆகஸ்ட் 15-ந் தேதி டெல்லி முதல் தமிழகத்தின் தலைநகர் சென்னை வரை தேசிய கொடியேந்தி நிறைவடைய உள்ளது.</p>
<p>தமிழ் கூறும் நல்லுலகம் இந்த 10 தின மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு பேராதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் வேளாண் பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில், இது ஒரு புதிய அரசு, நிதியில்லாமல் சிரமப்படுவது புரிகிறது. ஒன்றிய அரசு நிதியை தர வேண்டும். இது முழு நிறைவு பட்ஜெட் அல்ல. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்போதுதான் பட்ஜெட் முழு வடிவம் பெறும் என்றார்.</p>
<p>எதிர்க்கட்சி தலைவர் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். டாக்டர் அம்பேத்கர் கூறுவது போல் நாணயத்தின் இருபக்கம் போல் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும். எதிர்க்கட்சி இல்லாவிட்டால் ஆளுங்கட்சிக்கும் சட்டமன்றத்திற்கும் பொருள் இல்லை. மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை எதிர்க்கட்சி தலைவர் எழுப்பும்போது முதல்வரோ, அவை முன்னவரோ, அமைச்சர்களோ பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். பதில் சொல்ல முடியாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்றார்.</p>
<p>மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, முந்தைய அரசு கடைபிடித்த அதே நிலையைத்தான் இன்றைய அரசும் கடைபிடிக்கிறது. இது நல்ல அணுகுமுறை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாடு தனது உரிமைக்காக உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும். இந்த பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதுதான் நல்லது என்றார். கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டதற்கு, கல்விக்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும். கல்வியும் மருத்துவமும் முழுக்க அரசின் பொறுப்பு. அதுதான் சமூக நல அரசு. இந்த பொறுப்புகளில் இருந்து ஒன்றிய அரசு மெல்ல மெல்ல விலகிக்கொண்டு மாநில அரசுகளையும் விலக சொல்லி உலக வங்கியும் நிதி மூலதன உலக முதலாளிகளும் நிர்பந்திக்கிறார்கள். அந்த திசைக்கு நாடு சென்றுவிடக்கூடாது என்றார்.</p>
Source: Read Full Article