
<h2>திமுக மாஜிக்களுக்கு குறி</h2>
<p>தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், அடுத்தடுத்து திமுக மாஜிக்களை குறிவைத்து போலீசார் களம் இறங்கியுள்ளனர். எ.வ.வேலு, சிவசங்கர், செந்தில் பாலாஜி, தாமோ அன்பரசன் என குறிவைத்து ஸ்கெட்ச் போட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில், நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> கரூர் செல்வதற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய தவெக அரசு திட்டமிட்டது. அந்த வகையில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக எழுந்த புகாரையடுத்து கைது செய்ய போலீசார் செந்தில் பாலாஜியை சுற்றி வளைத்த நிலையில்,</p>
<h2>செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்</h2>
<p>முன் ஜாமின் வழங்கியதால் அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். இந்த நிலையில், திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார்களுக்கான டெண்டர் விட்டதில் முறைகேடு, சட்டவிரோதமாக பார் நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஜூலை 28ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.</p>
<p>அந்த வழக்கில், ஆண்டுதோறும் மதுபானங்கள் விற்பனை வாயிலாக, அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரித்த போதிலும், பார்கள் நடத்த டெண்டர் விடுதல் உள்ளிட்ட பணிகளில் வருவாய் குறைவாக வந்ததாகவே கணக்கு காட்டப்பட்டுள்ளது. மாநிலத்தில், 857 டாஸ்மாக் பார்களில், 284 மூடப்பட்டு விட்டதாக, ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இந்த பார்கள் உரிமம் புதுக்கப்படாமல், தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்துள்ளன.</p>
<h2>டாஸ்மாக் முறைகேடு</h2>
<p>இதனால், 2022-2023ஆம் ஆண்டில், கோவை வடக்கில், 17.27 கோடி ரூபாய், கோவை தெற்கில், 13.58 கோடி ரூபாய், நீலகிரியில், 1.95 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p>
<p> இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி கோவை, கரூர்,நீலகிரி ஈரோடு மாவட்டங்களில் பார் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யபட்டது. முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டும் இல்லை. பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுக்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கு செந்தில் பாலாஜிக்கு எந்த தொடர்பும் சம்பந்தம் இல்லை என வாதிட்டார்.</p>
<h2> முன் ஜாமின் கேட்ட செந்தில் பாலாஜி </h2>
<p>முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட விபரங்களை நீதிமன்றத்தில் வாசித்த வழக்கறிஞர் இளங்கோ, ஒதுக்கீடு பெற்றவர்கள் ஒரு வங்கியில் இருந்து வைப்பு தொகை செலுத்தியதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளானர். ஆனால் இதற்கான எந்த ஆதாரங்கள் இல்லை அரசியல் காரணங்களால் இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது என தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கு ஆவணங்கள் இன்று காலை தான் தனக்கு கிடைத்துள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். செந்தில் பாலாஜியன் அறிவுறுத்தல் படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செயல்பட்டுள்ளனர். புலன் விசாரணை தற்போது ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. குறைந்தது 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகிறது. எனவே விரிவான விசாரணை நடத்த வேண்டும். தற்போதைய நிலையில் இந்த மனு மீது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வாதிட்டார்.</p>
<h3>ஜாமின் மனு தள்ளுபடி- கைது செய்ய போலீஸ் திட்டம்</h3>
<p>இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்ற லஞ்ச ஒழிப்பு துறை வாதத்தை ஏற்பதாக தெரிவித்தார். முறைகேடு நடந்துள்ளதற்கும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆரம்ப கட்ட ஆதாரங்கள் உள்ளது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளது.</p>
<p>எனவே குற்றஞ்சாட்டப்பட்ட மனுதரார்காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது என்ற காவல்துறை வாதத்தை ஏற்று முன் ஜாமின் கோரிய <a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a> மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் களம் இறங்கியுள்ளனர். எப்போதும் அவர் தங்கியிருக்கும் விடுதியில் செந்தில் பாலாஜி இல்லையெனவும், உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/7-beauty-tips-to-follow-before-going-to-sleep-at-night-269416" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article