
<p>திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உள்ளே நடைபெறும் பணிகளைக் காண அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து சென்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதற்கு அவரே பதிலடி கொடுத்துள்ளார். </p>
<h2><strong>ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் ஷூ அணிந்த விவகாரம்</strong></h2>
<p>தமிழக வெற்றிக் கழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ். பதவியேற்ற நாள் முதல் கோயில்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது ஒருபுறம் பாராட்டைப் பெற்றாலும், மறுபுறம் கடும் கண்டனங்களையும் பெற்று வருகிறது. இப்படியான நிலையில் கடந்த ஜூலை 25ம் தேதி அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை புரிந்தார். </p>
<p>அந்த கோயிலில் கிழக்கு கோபுரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் ரமேஷ் கோயில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிழக்கு கோபுரத்தில் ஷூ அணிந்தபடி அவர் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. </p>
<p><strong>Also Read: <a title="CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/netizens-criticized-cm-joseph-vijays-department-wise-inspection-in-chennai-269503" target="_blank" rel="noopener">CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!</a></strong></p>
<p>பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலின் புனிதமான வளாகத்தில் அமைச்சர் ரமேஷ் ஷூவுடன் சென்ற வீடியோ பெரும் கண்டனங்களைப் பெற்றது. இந்து சமய மக்களின் நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அவரின் செயல்பாடு இருக்கிறது. எனவே தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. </p>
<h2><strong>அமைச்சர் ரமேஷ் பதிலடி</strong></h2>
<p>இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷிடம் இந்த ஷூ அணிந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அப்போது தன் தரப்பு விளக்கத்தை அளித்தார். அமைச்சர் ரமேஷ் பேசும்போது, “ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி முழுவதும் கற்களும், ஆணிகளும் சிதறி கிடக்கின்றன. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களே தங்கள் பாதுகாப்புக்காகக் காலணி அணிந்துதான் வேலை செய்கிறார்கள். நான் சென்றபோது அங்கிருந்த நன்கொடையாளர் நீங்கள் ஷூவைக் கழற்ற வேண்டாம், அப்படியே வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். </p>
<p>பணிகள் தொடங்கி விட்டதால் ஆய்வு செய்தால் முன்னெச்சரிக்கையாக செய்வது அவசியம். பகுத்தறிவு இருப்பவர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கிருக்கும் பணியாளர்களுக்கு ஏதாவது நடந்தால் பகுத்தறிவு இல்லாத இவர்கள் தான் பதில் சொல்வார்களா?. இதனால் நாங்கள் கோயிலை இழிவுப்படுத்து விட்டோம் என சொல்கிறார். இத்தகையவர்கள் அரசியல் செய்தே பழக்கப்பட்டவர்கள். இந்த மாதிரி விஷயங்களை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு பகுத்தறிவே இருக்காது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/applying-aloe-vera-gel-on-your-face-before-bed-benefits-269423" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article