
<p style="text-align: justify;">பிரபல ஒளிப்பதிவாளரும் டூ-லெட் திரைப்பட இயக்குநரும் தமிழ் தேசிய உணர்வாளருமான செழியன் சமீபத்தில் உயிரிழந்தார். 57 வயதே ஆன செழியன் உயிரிழந்தது தமிழ் திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இயக்குநர் செழியன் மறைந்த அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்காக செய்த செயல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும், சீமான் மீது பெரும் மரியாதையையும் ஏற்படுத்தியிருக்கிறது.<br /><br /><strong><em>பாக்கியராசன் பகிர்ந்த பதிவு</em></strong></p>
<p style="text-align: justify;">இது குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் சீமானின் முக்கிய தளபதியுமான பாக்கியராசன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார். அதில், செழியன் இறந்த அன்று சீமான் எப்படியெல்லாம் துடித்தார், அவருக்குக்காக என்னென்ன செய்தார் என்ற பட்டியலையும் விவரித்துள்ளார். ஆவேசமாக அரசியல் ரீதியாக பேசும் சீமானை பார்த்தவர்களுக்கு, கருணையும் அன்பும் ஊற்றெடுத்து பெருகி, அது கண்ணீராய் மாறி பெருக்கெடுக்கும் புதியதொரு சீமான் இந்த பதிவை படிக்கும்போது தெரிவார்.</p>
<figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/754084c93cc0575f9e9821415df58a6c1783927703340108_original.jpg" alt="சீமானுடன் பாக்கியராசன்" />
<figcaption>சீமானுடன் பாக்கியராசன்</figcaption>
</figure>
<p style="text-align: justify;"><br /><br /><strong><em>பாக்கியராசன் பகிர்ந்தது இதுதான்</em></strong></p>
<p style="text-align: justify;">அந்த பதிவில், “அதிகாலை 05 மணி! அண்ணன் சீமானிடமிருந்து அழைப்பு. எடுத்ததும் கடிந்து கொண்டபோதுதான், தொடர்ச்சியாகப் பல முறை அழைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். “தம்பி செழியன் நம்மைவிட்டுப் போய்ட்டான். இன்னைக்கு துயரமா விடிஞ்சிருக்கு. உடனே, தரமணி அப்போலோ மருத்துவமனைக்கு வா” என மனம் நொறுங்கிப் போய் பேசினார். அண்ணன் செழியன் அவர்களை ஒரு வாரம் முன்பு போய் பார்த்தபோது, “நிறைய வேலை இருக்கு. வந்து செய்யணும்” என்று அவர் நம்பிக்கையோடு கூறியதை நினைத்துக் கொண்டே, மருத்துவமனைக்கு அவசரமாய் கிளம்பி ஓடினேன். மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்த தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தபோது, அந்த இருட்டில் அண்ணன் சீமானும், அண்ணன் இயக்குனர் பாலாவும், செழியன் அண்ணன் கட்டிலுக்கு முன் அமர்ந்திருந்தனர். உடலை எடுத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. தேவா அண்ணனை அழைக்க அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அவரிடம் பேசிவிட்டு, இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க செழியன் அண்ணனின் வீட்டுக்குச் சென்றபோது, அவரது மனைவி பிரேமா அண்ணி, “எதுக்கு இவ்ளோ பேர் வரீங்க? அவர் நல்லாதானே இருக்கார். இரவு 8 மணிக்கு போய் பார்த்தப்ப என்கிட்ட பேசினாரே” என்று என்னைப் பார்த்துக் கேட்டபோதுதான், அவர் இறந்ததே அண்ணிக்கு தெரியாது என்பது தெரிந்தது. அதனை எப்படி சொல்வதென்று தெரியாது மிகுந்த மனவலியோடு, பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டேன்.</p>
<p style="text-align: justify;"><strong><em>2 நாளைக்கு ஏழு லட்சமா ? பணத்தை கட்டிய சீமான்</em></strong></p>
<p style="text-align: justify;">மருத்துவமனை நிர்வாகமோ பணம் கட்டச்சொல்லி, ஆள்விட்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் சீமான் அண்ணன், “2 நாளுக்கு ஏழு லட்சமாம்டா” என்றார். “அவ்வளவு செலவு எப்படி வந்தது?” என்று ஊழியரிடம் கேட்டேன். “Itemized bill தருகிறேன்“ என்றார். ‘எப்படி உடனடியாக இவ்வளவு பணம் கட்டுவது?’ என்ற கவலையோடு நிற்கையில், தேவா அண்ணன் வந்தார். அவரிடம், “கட்டணத்தை குறைக்க முடியுமா? என கீழே போய் கேள்” என்றார் அண்ணன் சீமான். அவர் அந்த ஊழியரை அழைத்துக்கொண்டு கீழே போனார். ‘உடலை ஊருக்கு எடுத்து செல்லலாமா? இல்லை, சென்னையிலேயே இறுதிச்சடங்கை செய்யலாமா?’ என்ற பேச்சு வந்தபோது, “செழியன் அண்ணன் சென்னையில் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் கீழே பார்க்கிங் பகுதியில் உடலை வைக்க அனுமதி கேட்க வேண்டும். ஆனால், அனுமதி தருவது சந்தேகம்தான்” என்றனர் செழியன் அண்ணனின் உதவியாளர்கள். அண்ணியோ எந்த முடிவும் எடுக்கமுடியாமல் அழுதுகொண்டிருந்தார். அங்கிருந்த அணைவரும் யார் பொறுப்பெடுத்து செய்வதென்றறியாமல் கையறுநிலையில் நின்றனர். அங்கு நிலவியிருந்த அடர்மௌனத்தை உடைத்த அண்ணன் சீமான், “என் தம்பியை நானே கூட்டிட்டு போறேன். அவனுக்கு என்ன செய்யணுமோ, அண்ணனாக நானே செய்றேன். நம்ப அலுவலகத்தில் வச்சு, அவனை எல்லோரும் வந்து பார்க்க வச்சுரலாம்” என அடுத்த நொடியே சொல்லிவிட்டு, என் பக்கம் திரும்பி, “நீ வேலையை ஆரம்பிடா தம்பி” என்றார். நானும் அதற்குத் தயாரானேன். அதற்குள் தேவா அண்ணன் மேலே வந்து, “அண்ணன் கேட்டுக்கிட்டதுக்காக கட்டணத்த குறைச்சுருக்காங்க. உடனே பனத்தை கட்டி உடலை எடுத்துக்கிட்டுப் போவோம்” என்றார். சீமான் அண்ணன் உடனே வீட்டுக்கு ஆள் அனுப்பி, பணம் எடுத்து வரச் சொல்லிவிட்டு, அறையைவிட்டு வெளியே வந்தார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட செழியனின் உடல்</em></strong></p>
<p style="text-align: justify;">கணவர் இறந்த தகவல் அறிந்து வந்திருந்த செழியன் அண்ணன் மனைவியிடம், “தம்பி உடலை நம்ம அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வோம். அங்கே வந்து தம்பியை எல்லோரும் பார்க்கட்டும்” என்று அழுதுகொண்டே சொன்னார். அப்போது, “அவர் இல்லாமல் நான் எப்படி வாழ்றது?” என அண்ணி பிரேமா கதறிய கதறல் வார்த்தையில் சொல்லி மாளாது. அதனைப் பார்க்க முடியாதவனாய் செழியன் அண்ணனுக்கு அணிவிக்க zeptoவில் ஆர்டர் செய்த வேட்டி, சட்டையை வாங்கக் கீழே சென்றுவிட்டேன். அண்ணன் சீமான் வீட்டிலிருந்து கயல்விழி அண்ணி கொடுத்துவிட்ட பணம் வந்ததும், அதை கீழே சென்று கட்டிவிட்டு, உடலை எடுத்துச் செல்ல வாகனத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு மேலே வந்தார் தேவா அண்ணன். கட்சி அலுவலகத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை, தம்பிகள் தாசனும், வசந்தனும், மதுரவாயல் ஆனந்தோடு சேர்ந்து செய்து முடிக்கச் சொல்லியிருந்தேன். இந்நிலையில் அண்ணன் செயழினின் உடல் எடுத்துச்செல்ல தயாரானது. வேளச்சேரி நாம் தமிழர் உறவுகள் மாலை வாங்கிக்கொண்டு தயாராய இருந்தனர். <br /><strong><em><br />கதறி அழுத சீமான்</em></strong></p>
<p style="text-align: justify;"><br />செழியன் அண்ணனின் உடலுக்கு மாலைபோட சீமான் அண்ணனையும், பாலா அண்ணனையும் அழைத்தார்கள். அருகில் சென்ற சீமான் அண்ணன் 'செல்லம் ! உன்னை இப்படி பார்க்க வைச்சிட்டியே..' என சத்தமாக அழுதார். அண்ணனின் கதறல் சுற்றி நின்ற எங்களை உலுக்கியது. தன் தம்பியின் பிரிவை தாங்கா துயர், மகனையும் கனவனையும் இழந்த தம்பி மனைவியின் விம்மல், என உயிர் வெடிப்பின் ஓலம் அண்ணனின் அழுகுரலில் தோய்ந்திருந்தது. அவசர ஊர்தியில் உடலை எடுத்துக் கிளம்பியதும், சீமான் அண்ணன் வீட்டுக்குச் சென்று, உடையை மாற்றிவிட்டு அலுவலகம் வருவார் என நினைத்தேன். ஆனால், அவசர ஊர்தியின் பின்னாலேயே அலுவலகம் வந்தார். இறுதி வணக்கம் செய்ய எல்லோரும் வருவார்கள் என்பதால், ‘கட்சி அடையாளம் ஏதும் இருக்க கூடாது' என்று அறிவுறுத்திய அண்ணன், தலைமைக்கு வெளியே உள்ள கட்சிக்கொடியைக்கூட இறக்கச் சொல்லிவிட்டார். நம்மால், கட்சியால், செழியன் அண்ணன் குடும்பத்தினருக்கு எந்த சங்கடமும் வந்துவிடக்கூடாது என்பதில் அண்ணன் உறுதியாக இருந்தார். இதனால், செழியன் அண்ணன் உடலுக்குக் கட்சியின் புலிக்கொடி போர்த்தவதும், கண்ணீர் வணக்கம் என முழக்கமிடுவதும், உடலுக்கு முன் நின்று அகவணக்கம் செய்யப்படுவதும்கூட தவிர்க்கப்பட்டது. தனது இருப்பு, இறுதி மரியாதை செலுத்த வருபவர்களுக்கு சங்கடம் ஏற்படலாம் என நினைத்து, உடலுக்கு அருகே இல்லாமல், பல நேரம் அலுவலகத்தின் மேல் தளத்திலேயே இருந்தார். பாலா அண்ணனுடன் உட்கார்ந்து தனக்கும், தனது செல்லத்துக்குமான அன்பையும் உறவையும் சிலாகித்தவாறே நேரத்தை கடத்தினார். இதற்கிடையே, செழியன் அண்ணனின் உடன்பிறந்த தம்பிகள் ஊரிலிருந்து வருவதை மணிக்கொரு முறை உறுதிபடுத்திக் கொண்டே இருந்தார். காலையில் உடல் வைக்கப்பட்டது முதல், மாலையில் இறுதிச்சடங்கு செய்யப்படும் வரை எல்லாவற்றையும் செய்து முடித்து, மின்சாரச்சுடுகாட்டில் உடல் எரியூட்டப்பட்டப் பின்னர், எல்லோரும் கிளம்பியப் பிறகுதான் அண்ணன் சீமான் கிளம்பினார். அன்று அண்ணி பிரேமாவிடம் தைரியம் சொல்லிவிட்டுக் கிளம்ப முனையும்போது, “அவர் இல்லாம நான் என்ன செய்வேன்?” என அழுதுப் புலம்புகையில், “அவனுக்குப் போய் இப்படி ஆகும்னு யாராவது நெனச்சோமா?” என வெடித்துக் கதறினார். <br /><br /><strong><em><br />உனக்கு பெரியப்பா இருக்கேன் – செழியன் மகனை அணைத்துக்கொண்ட சீமான்<br /></em></strong><br />பின்பு செழியன் அண்ணனின் மகளிடம், “உனக்குப் பெரியப்பா இருக்கேன். தைரியமா இரு” என மனம் உடைந்தவராய் அங்கிருந்து கிளம்பினார். எந்த குறையுமில்லாமல், கௌரவமாக, தகுந்த மரியாதையோடு தம்பியை வழியனுப்பவேண்டும் என்பதே அண்ணனின் நோக்கம். உடன் பிறந்தானாய் நின்று, பாசக்காரன் செழியனுக்கு அனைத்தையும் செய்ய வேண்டுமென்பதே அவரது எண்ணம். அதை கனிவோடும், மிகுந்த பொறுப்போடும் செய்து முடித்தார். இறுதியில், செழியன் அண்ணனின் தம்பி இளங்கோ நன்றி சொன்னபோது அண்ணன் சீமான் கதறியதை நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள்; அவர்களுக்குள் இருந்த பினைப்பு!!! அண்ணன் சீமான் எவ்வளவு பேரன்புக்காரர் என்பதைத் தெரிந்துகொள்ள வாழ்நாள் முழுமைக்கும் அவரோடு பயணப்பட வேண்டியதில்லை, சிலமனித்துளிகள் போதும். செழியன் அண்ணனின் இறப்பு நிகழ்ந்த அந்த ஒரு நாள் காலை முதல் இரவு வரை சீமான் அண்ணனோடு இருந்திருந்தாலே தெரிந்திருக்கும் அவரின் அப்பழுக்கற்ற அன்பின் பெருமழை. அந்த மழை எல்லோருக்குமானது. எப்பாடுபட்டாவது பேரன்பை மட்டுமே நிறைத்திருக்கும் அவருடைய அந்த முழு இதயத்தின் ஒரு ஓரத்தில் எங்காவது இருந்துவிடவேண்டும் என அதனைப் பார்த்தவர்களுக்கு மனம் அடித்துக் கொள்ளும் என்பது உறுதி. <br /><br /><strong><em><br />திமுகவையும் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வையும் விமர்சித்த பாக்கியராசன்</em></strong></p>
<p style="text-align: justify;">அவரைத்தான் வெறுப்பை விதைக்கிறார் என்கிறது இந்த உபிஸ் கொத்தூஸ். அவரைத்தான் விலைபோனவர் என்கிறது தற்குறி கூட்டம். உள்ளபடியே அவர் மனத்துக்கு யாரையும் வெறுக்கத் தெரியாது. அவர் கோவப்படுவார், ஆனால் எவரையும் வெறுக்க வாய்ப்பே இல்லை. மாண்பு அவரின் இயல்பு; பெருந்தன்மை அவரின் பிறவிக்குணம். அது அரசியலுக்காக ஒருநாளும் மாறாது; மாற்றவும் முடியாது. அதுதான் சீமான் எனும் மகோன்னதமானவனின் மகத்தான அடையாளம் என்பேன்” என அந்த நீண்ட பதிவில் சீமான் குறித்து நெகிழ்ச்சியாக எழுதியிருக்கிறார் பாக்கியராசன்</p>
<p style="text-align: justify;"> </p>
Source: Read Full Article