
<p style="text-align: justify;"><strong>மயிலாடுதுறை:</strong><br />மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் தீவிரமடைந்துள்ள வெப்பக் காற்று மற்றும் மஞ்சள் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் கருகி சேதமடைந்து வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">96 ஆயிரம் ஏக்கர் இலக்கு - நீர் பற்றாக்குறையால் முடங்கிய விவசாயம்</h3>
<p style="text-align: justify;">மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு சுமார் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்ய வேளாண்மைத் துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய நான்கு வட்டாரப் பகுதிகளில், ஆழ்துளை கிணற்றுப் பாசன வசதி (பம்புசெட்) கொண்ட விவசாயிகள் வழக்கம்போல முன்பட்ட குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.</p>
<p style="text-align: justify;"><br />இருப்பினும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வழக்கமாக நீர் திறக்கப்படும் ஜூன் 12-ஆம் தேதியன்று அணை திறக்கப்படவில்லை. இதனால், காவிரி ஆற்று நீரை மட்டுமே பிரதானமாக நம்பி விவசாயம் செய்யும் பெரும்பாலான விவசாயிகள் குறுவை நடவு செய்ய முடியாமல், தங்களது நிலங்களை தரிசாகப் போடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p>
<h3 style="text-align: justify;">கதிரும் வேளையில் தாக்கிய 'மஞ்சள் நோய்': கவலையில் விவசாயிகள்</h3>
<p style="text-align: justify;">பம்புசெட் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து, தண்டு உருளும் பருவத்தையும், கதிர் வரும் நிலையையும் எட்டியுள்ளன. இந்நிலையில்தான், இயற்கை விவசாயிகளுக்குப் பெரும் சோதனையாக மாறியுள்ளது. நிகழாண்டு எதிர்பார்க்கப்பட்ட கோடை மழை முற்றிலும் பொய்த்துப்போனது. அத்துடன், வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டதோடு, மாவட்டம் முழுவதும் கடுமையான வெப்பக் காற்றும் வீசி வருகிறது. இதன் விளைவாக, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 'மஞ்சள் நோய்' மற்றும் 'இலைக்கருகல் நோய்' ஆகியவை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளன.</p>
<p style="text-align: justify;">பயிர்கள் தங்களின் இயல்பான பச்சை நிறத்தை இழந்து, மஞ்சள் நிறமாக மாறி, செழுமையின்றி வாடி வருகின்றன. இதனால் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதால், முதலீடு செய்த பணத்தைக்கூட எடுக்க முடியுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். "கதிர் விடும் நேரத்தில் இலைக்கருகலும் மஞ்சள் நோயும் பயிர்களைச் சூழ்ந்துள்ளதால், இத்தனை மாத உழைப்பும் வீணாகிவிடுமோ என்ற பயத்தில் நாட்களைக் கடத்தி வருகிறோம்." என வேதனை தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட உள்ளூர் விவசாயிகள் </p>
<h3 style="text-align: justify;">விவசாயிகளின் கோரிக்கை</h3>
<p style="text-align: justify;">நெற்பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதல் குறித்து டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் தீவிர கவலையைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்: "நடப்பாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் பாசனத்தைக் கொண்டு சுமார் 95 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நம்பிக்கையோடு நடவு செய்துள்ளோம். ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத சூழ்நிலையிலும், கடன் உடன்களைப் பெற்று பம்புசெட் நீரைக் கொண்டு பயிர்களைக் காப்பாற்ற போராடி வருகிறோம். ஆனால், கடுமையான வெயில் மற்றும் வெப்பக் காற்று காரணமாகப் பயிர்களில் மஞ்சள் நோய் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த 2024-ஆம் ஆண்டு முதலே இந்த மஞ்சள் நோய் தாக்குதல் நெற்பயிர்களில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதிக வெப்பமே இதற்கு முதன்மை காரணமாக அமைகிறது. நோய் தாக்குதலால் பயிர்கள் பாழாகி வருவது குறித்து அரசு அதிகாரிகளிடமும், பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமும் பலமுறை முறையிட்டும் அவர்கள் இதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அலட்சியப் போக்கையே காட்டி வருகிறார்கள். எனவே, நெற்பயிர்களில் நோய் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேளாண் நிபுணர்கள் மூலம் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்குத் தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்கிப் பாதுகாக்க வேண்டும் என்றார்.</p>
<h3 style="text-align: justify;">அரசுக்கு எழும் அழுத்தங்கள்</h3>
<p style="text-align: justify;">குறுவை சாகுபடி பொய்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், உடனடியாக வேளாண்மைத் துறை அதிகாரிகளை அனுப்பி பாதிப்புகளைக் கணக்கெடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்றத் தேவையான மருந்துகள் மற்றும் பூச்சிக்கொல்லி ஆலோசனைகளை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அரசு உடனடியாக தலையிட்டு உரிய நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்பதே தற்போதைய மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
Source: Read Full Article