
<p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பான விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். </p>
<h2><strong>பழனி கோயில் நில மோசடி விவரம்</strong></h2>
<p>திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக வீற்றிருக்கிறார். இதனிடையே பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. கொடைக்கானல் சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், குறிப்பிட்ட நாளில் தற்காலிக கூடுதல் பொறுப்புக்காக பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் அன்றைய தினம் அவசரமாக பத்திரப்பதிவு நடந்துள்ளது. </p>
<p><iframe title="Dindigul Sreenivasan | ’’யோவ்..உன் வயசு என்ன?உனக்கு காதலி இருக்கா?’’திட்டிய திண்டுக்கல் சீனிவாசன்" src="https://www.youtube.com/embed/lAkTuLue6TA" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தின் புகாரின் பேரில் நிலத்தின் பட்டா மற்றும் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்து சமய அறநிலையத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் நில மோசடி விவகாரத்தில் எப்படி தவறு நடந்தது என்பதையும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கமளித்தனர். ஆனால் எதிர்க்கட்சிகள் அமைச்சரே தவறு நடந்ததாக ஒப்புக்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். </p>
<h2><strong>எடப்பாடி பழனிசாமி கண்டனம்</strong></h2>
<p>அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ எழுத்துப்பிழைப் போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.</p>
<p><strong>Also Read: <a title="சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்தும் நீக்கம்!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/chengalpattu-ex-tvk-executive-veerasamy-arrested-over-on-bribary-complaint-267694" target="_blank" rel="noopener">சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்தும் நீக்கம்!</a></strong></p>
<p>தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்! இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது.</p>
<p>இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு பவர் சென்டர் தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே பவர் சென்டர் என்று சொன்ன முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்களே, இந்த ஊழலில் பின்னால் யார் அந்த பவர் சென்டர்?</p>
<p>அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த பவர் சென்டர்? இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.</p>
<p>நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/simple-ways-to-reduce-severe-back-pain-267463" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article