
<h3><strong>நீண்ட நாள் முன் விரோதம்</strong></h3>
<p dir="ltr">நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மூலச்சி பகுதியை சேர்ந்தவர் சித்திரகுப்தன். இவரது மகன் காளிமுத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வருவதாக போலீசார் கூறுகின்றனர்.</p>
<p dir="ltr">கடந்த காலங்களில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதல்களில் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் காளிமுத்து தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.</p>
<p dir="ltr">அப்போது அங்கு வந்த பெருமாள் தரப்பினர் , தாங்கள் வந்த அம்பாசிடர் காரை குழந்தைகளுடன் வந்த காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியதாக தெரிகிறது. இந்த கொடூர தாக்குதலில் காளிமுத்துவின் மகன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p>
<h3 dir="ltr"><strong>அரிவாள் வெட்டு - தலை துண்டிப்பு </strong></h3>
<p>இதனைத் தொடர்ந்து கீழே விழுந்த காளி முத்துவை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர். மேலும் அவரது தலையை துண்டித்து மூலச்சியில் கொலையாளிகள் வைத்து விட்டு தப்பிச் சென்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த காளிமுத்துவின் மற்றொரு மகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய பெருமாள் தரப்பினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொடூர கும்பல் பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்க மூலச்சி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p>
Source: Read Full Article