
<p>விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு குழுவின் கலந்தாய்வு மற்றும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (15.07.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலுமாக தடுப்பது, விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<h2>விபத்து பகுதிகளுக்கு கூட்டு ஆய்வு:</h2>
<p>விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவொரு பகுதியிலும் சாலை விபத்து ஏற்பட்டால், உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO), காவல் துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாகச் சென்று விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான துல்லியமான காரணங்களை ஆய்வு செய்து, மீண்டும் அதே இடத்தில் விபத்துக்கள் நேரிடாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<h2>மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு:</h2>
<p>மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தற்போது நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் கேட்டறியப்பட்டது. இப்பணிகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.</p>
<h2>ஒளிரும் வேகத்தடைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள்:</h2>
<p>வாகன ஓட்டிகளுக்கு தொலைவில் இருந்தே தெளிவாகத் தெரியும் வகையில், அனைத்து சாலைகளிலும் உள்ள வேகத்தடைகளின் மீது 'தெர்மோபிளாஸ்ட்' பெயிண்ட் கொண்டு ஒளிரும் கோடுகள் வரையப்பட வேண்டும். மேலும், விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களை (Black Spots) கண்டறிந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் தகவல் பலகைகள் (Sign Boards) மற்றும் வாகன நிறுத்த பலகைகள் (Parking Boards) அமைக்கப்பட வேண்டும். வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் திசைகாட்டும் பலகைகளை சந்திப்புகளுக்கு 50 மீட்டருக்கு முன்னரே நிறுவ வேண்டும் எனவும், சாலை சந்திப்பு பகுதிகளை மேம்படுத்தி தேவையான இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் (High Mast Lights) அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<h2>ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்:</h2>
<p>சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் சாலை ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக கண்டறிந்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலை குறியீடுகளை முறையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.</p>
<p>இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல.ஆகாஷ் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.ஸ்ரீ ராஷித், இ.ஆ.ப., மற்றும் போக்குவரத்து, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
Source: Read Full Article