
<p>தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் அரங்கேறியது. அரை நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி முதல் தேர்தலிலே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது தவெக. </p>
<h2><strong>அதிமுக மாஜிக்கள்:</strong></h2>
<p>ஜெயலலிதா காலமானது முதலே பின்னடைவைச் சந்தித்து வரும் அதிமுக-விற்கு இந்த தேர்தல் மிகப்பெரிய பின்னடைவை அளித்தது. முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்பட அதிமுக வசம் இருந்த 6 எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம் தாவினர். அதிமுக-வில் இருந்து தவெக-விற்கு இவர்கள் மட்டுமின்றி முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் என பல முன்னாள் அமைச்சர்களும் தவெக-வில் இணைந்தனர்.</p>
<h2><strong>முக்கியத்துவம் தராத தவெக:</strong></h2>
<p>பல்வேறு முக்கிய பொறுப்புகள், பதவிகள் ஆகியவற்றை எதிர்பார்த்து தவெக-வில் இணைந்த அவர்களுக்கு தற்போது வரை கட்சியில் எந்தவொரு முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கும் சூழலில் எம்எல்ஏ-பதவியை ராஜினாமா செய்து தவெக-விற்கு வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.</p>
<p>மேலும், விஜய் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விடுமோ? என்ற ஆதங்கமும், சந்தேகமும் தவெக தொடங்கப்பட்டது முதலே உடனிருக்கும் தொண்டர்களுக்கு உள்ளது. இதனால், இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் வந்தால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட தவெக சார்பில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>
<h2><strong>என்ன கதி?</strong></h2>
<p>ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்ததற்கு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக-வின் கீழ்மட்ட தொண்டர்கள் மத்தியிலே கடும் அதிருப்தி உள்ளது. கட்சி ரீதியான எந்தவொரு முக்கிய பொறுப்புகளும் விஜய் தரப்பில் இருந்து அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் இருந்ததையும் பறிகொடுத்துவிட்டு தவிப்பது போல தற்போது தவித்து வருகின்றனர். </p>
<p>முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சரான பர்வேஸை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பல்வேறு ஒப்பந்தங்களை தனக்குப் பெற்றுக்கொள்ளவும் காய் நகர்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p>
<p>தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்த முயற்சிகள் நடப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ஆட்சியைப் பிடித்த பிறகு தவெக-விற்கு தாவிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களை மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களாக மாற்றிய பிறகு அவர்கள் விலைபோக மாட்டார்களா? என்ற சந்தேகமும் தவெக தலைமைக்கு இருப்பதால் இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தயக்கம் காட்டி வருகிறது. </p>
<p>தற்போது பல்வேறு நெருக்கடியான சூழலை தவெக அரசு சந்தித்து வரும் சூழலில், அதிமுக-வில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை அளித்து நெருக்கடியை மேலும் அதிகரித்துக் கொள்ள <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பதவியை ராஜினாமா செய்து வந்தவர்களின் நிலை? என்னவென்று தெரியும். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-prevent-water-accumulation-in-the-fridge-during-the-rainy-season-269546" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article