
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> காவிரி டெல்டா மாவட்டங்களில் வாத்து மேய்க்கும் பணிக்காக ஆந்திர மாநிலத்திலிருந்து ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் கொத்தடிமை முறையில் அழைத்து வரப்படுவதாக ஷெட் இந்தியா (SHED India) அமைப்பு தெரிவித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">கடன் சுமை மற்றும் வறுமையைப் பயன்படுத்தி சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் இந்த நடைமுறையைத் தடுக்க அரசு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>கொத்தடிமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு</strong></p>
<p style="text-align: justify;">தமிழக அரசு, 2030-ஆம் ஆண்டுக்குள் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்குடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்களை அடையாளம் காணுதல், மீட்பு, மறுவாழ்வு, கணக்கெடுப்பு, அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் பல்துறை ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் அரசு துறைகளுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் ஷெட் இந்தியா அமைப்பின் சார்பில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை குறித்து விழிப்புணர்வு மற்றும் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் இயக்குநர் பத்திமாராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பி. ஜெய் எடில்பர்ட் முன்னிலை வகித்தார். இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே. பிரபு, சமூகச் செயற்பாட்டாளர்கள் புகழ், மேக்லின், திட்ட உதவியாளர் ஆர். முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.</p>
<p style="text-align: justify;"><strong>கொத்தடிமை முறை எப்படி செயல்படுகிறது?</strong></p>
<p style="text-align: justify;">நிகழ்ச்சியில் பேசிய ஷெட் இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி. ஜெய் எடில்பர்ட் கூறுகையில், அவசர தேவைகளுக்காக முன்பணம் வழங்கி வேலைக்கு அழைத்துச் செல்வது, நீண்ட நேரம் வேலை செய்ய நிர்பந்திப்பது, குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்காதது, குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்காதது, உடல் மற்றும் மனரீதியான வன்முறைக்கு உள்ளாக்குவது போன்றவை கொத்தடிமை முறையின் முக்கிய அடையாளங்களாக உள்ளன என்றார்.</p>
<p style="text-align: justify;">தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 60 ஆயிரம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆடு மேய்த்தல், வாத்து மேய்த்தல், செங்கல் சூளைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><strong>டெல்டா மாவட்டங்களில் வாத்து மேய்க்கும் பணிக்கு சிறுவர்கள் </strong></p>
<p style="text-align: justify;">தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்கள் மற்றும் தோப்புகளில் வாத்து மேய்க்கும் பணிக்காக ஆந்திர மாநிலத்திலிருந்து ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் அழைத்து வரப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">வேலைக்கு அழைத்து வரப்படும் சிறுவர்களுக்கு செல்போன் வழங்கி, "படிக்க வேண்டாம், வேலை செய்தால் போதும்" என்று ஆசை வார்த்தைகள் கூறப்படுவதாகவும், அவர்களை அழைத்து வரும் நபர்கள் தங்களை குடும்ப உறுப்பினர்கள் என்று கூறும்படி மூளைச்சலவை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சில குடும்பங்கள் கடன் சுமை காரணமாக தங்களது குழந்தைகளையே வேலைக்கு அனுப்பும் அவல நிலையும் இருப்பதாக தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><strong>மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்</strong></p>
<p style="text-align: justify;">இந்தச் சிறுவர்களை அடையாளம் கண்டு மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தஞ்சாவூரில் முதன்முறையாக இரண்டு சிறுவர்களை கொத்தடிமை முறையில் வேலைக்கு அமர்த்திய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லெட்சுமணசுவாமி என்பவருக்கு கடந்த மே மாதம் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாகவும் ஜெய் எடில்பர்ட் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">மேலும், மீட்கப்பட்ட அந்த இரு சிறுவர்களுக்கும் அரசு சார்பில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளதாகவும், கொத்தடிமைத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">கொத்தடிமை முறை குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்தாலோ, உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. </p>
Source: Read Full Article