
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> குதிரை பேரம் என்று கூறுவதெல்லாம் பொய். நான் நாளை தவெகவில் இணைகிறேன். இது நான் எடுத்த முடிவு. அப்போ இது என்ன குதிரை பேரமா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் ஒரத்தநாடு மா.சேகர்.</p>
<p style="text-align: justify;">அதிமுகவில் நீண்டகாலமாக பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வந்த ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாகவும், நாளை வியாழக்கிழமை சென்னை மகாபலிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியில் இணைவதாகவும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/34bbfb401ce30c773354e54138d318671782908841193733_original.jpg" /></p>
<p style="text-align: justify;"><strong>43 ஆண்டுகால அரசியல் பயணம்</strong></p>
<p style="text-align: justify;">இதுகுறித்து தஞ்சாவூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் இருந்து அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. </p>
<p style="text-align: justify;">1989-ஆம் ஆண்டு ஒரத்தநாடு வீடுகட்டும் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், பேரூர் கழகச் செயலாளர், நகரச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். மேலும், 2001-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒரத்தநாடு பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அதிமுக வழங்கியதற்காக கட்சிக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். </p>
<p style="text-align: justify;">கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து தீவிரமாக சிந்தித்து வந்தேன். மக்களுக்குத் தொடர்ந்து முழுமையாகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில், தற்போதைய அரசியல் சூழலை ஆய்வு செய்த பிறகே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளேன். மேலும், தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவியின் மக்கள் நலக் கொள்கைகளை நினைவூட்டுவதாக கருதுவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.</p>
<p style="text-align: justify;"><strong>அதிமுக தலைமையிடம் அரவணைப்பு இல்லை</strong></p>
<p style="text-align: justify;">அதிமுகவில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மா.சேகர், கட்சியில் "அரவணைப்புத் தன்மை இல்லை" என்ற ஒரே காரணத்தையே சுட்டிக்காட்டினார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும், இதுவே தனது பதில் என்றும் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">மேலும், சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு வெளியேறுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அரசியல் முடிவு என்றும் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">'<strong>குதிரை பேரம் இல்லை'</strong></p>
<p style="text-align: justify;">தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிர்வாகிகள் தொடர்பாக குதிரை பேரம் நடைபெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை மா.சேகர் மறுத்தார். மக்களுக்கு மேலும் சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் புதிய அரசியல் முடிவை எடுத்துள்ளதாகவும், தனது அரசியல் பயணத்தில் எந்த முடிவையும் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே எடுத்து வருகிறேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ இல்லை. இது முழுமையாக தனது தனிப்பட்ட முடிவு. இப்போது நான் தவெகவில் இணைவது என்ன குதிரை பேரமா என்றும் கேள்வி எழுப்பினார். </p>
<p style="text-align: justify;"><strong>நிர்வாகிகளும் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வில் இணைகின்றனர்</strong></p>
<p style="text-align: justify;">தொடர்ந்து அவர் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் என்னுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர். ஒன்றிய மற்றும் நகரக் கழகச் செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.</p>
Source: Read Full Article