
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் நேரடியாக ஆலோசனை வழங்க வாய்ப்பு. தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், 9 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர் என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.</p>
<p style="text-align: justify;">தமிழக அரசின் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை மேலும் பயனுள்ளதாக்கும் நோக்கில், விவசாயிகளின் நேரடி கருத்துகளைப் பெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூலை 3) தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதில் காவிரி டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>வேளாண் பட்ஜெட்டுக்கு முன் ஆலோசனைக் கூட்டம்</strong></p>
<p style="text-align: justify;">தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், தற்போதைய அரசும் இந்த ஆண்டிற்கான வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.</p>
<p style="text-align: justify;">முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்படி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் தலைமையில் விரைவில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துகளை நேரடியாகக் கேட்டு, அவற்றை பட்ஜெட்டில் பரிசீலிக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூரில் முக்கிய ஆலோசனை</strong></p>
<p style="text-align: justify;">இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணியளவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.</p>
<p style="text-align: justify;">தமிழக வேளாண் உற்பத்தி ஆணையரும், வேளாண்மைத் துறைச் செயலாளருமான பி. சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு</strong></p>
<p style="text-align: justify;">இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் தலைமையில், கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மேலும், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு, விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக பதிவு செய்து, அவற்றை வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பரிசீலிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>விவசாயிகளின் எதிர்பார்ப்பு</strong></p>
<p style="text-align: justify;">காவிரி டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பாசன வசதிகள், விளைபொருட்களுக்கு உரிய விலை, விவசாய மானியங்கள், கூட்டுறவு கடன், பயிர் காப்பீடு, இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, நீர்வள மேலாண்மை மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தக் கூட்டத்தில் முன்வைக்கத் தயாராக உள்ளதாக விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">விவசாயிகளின் நிலைமையை நேரடியாக அறிந்து, அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படுவது, கொள்கை வகுப்பில் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.</p>
Source: Read Full Article