
<h2 dir="ltr"><strong>காங்கிரஸ் செயற்குழு கூட்டம்</strong></h2>
<p dir="ltr">தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் செயல் குழு கூட்டத்தில் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை , சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் , முன்னாள் ஒன்றிய அமைச்சர் பா. சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
<h2 dir="ltr"><strong>இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து மாணிக்கம் தாகூர் கூறுகையில் ;</strong></h2>
<p dir="ltr">காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டிலும் தங்களின் அடையாளம் , முகம் , வரலாறு என எல்லாமே பெருந்தலைவர் காமராஜர் தான். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக காமராஜர் பிறந்த நாளில் சிலைக்கு மாலை அணிவித்தல், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு புதிய கோணத்தில் , அரசு நிர்வாகத்தில் தூய்மையையும் நேர்மையையும் வலியுறுத்தும் வகையில் மக்கள் இயக்கமாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<h2 dir="ltr"><strong>பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில் ; </strong></h2>
<p dir="ltr">காமராஜரின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஜூலை 13 முதல் 19 வரை ஒரு வார காலத்திற்குப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்கமாக, ஜூலை 13 அன்று சென்னை மெரினா கடற்கரையில் பெருந்தலைவர் காமராஜரின் பிரம்மாண்ட மணல் சிற்பம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதில் " கரைபடியாத கை " மற்றும் "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் " ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரால் திறந்து வைக்கப்படவுள்ளது.</p>
<p dir="ltr">தொடர்ந்து, காமராஜர் முதன் முதலில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கக் காரணமாக அமைந்த குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில், ஜூலை 15 அன்று மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.</p>
<p dir="ltr">அதே நாளில் காலையில் விருதுநகரில் உள்ள காமராஜரின் இல்லத்தில் இம்முழக்கத்தை கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி வைக்கவுள்ளார்.<br />ஜூலை 17 முதல் 19 வரை மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் காமராஜரின் உருவப்படம் தாங்கிய பெரிய துணிப் பதாகைகள் (பேனர்கள்) வைக்கப்படும். இந்த பதாகைகளில் பொதுமக்கள் தங்களின் கைமுத்திரையையும், கையெழுத்தையும் பதித்து ஊழலுக்கு எதிரான தங்களின் ஆதரவை வெளிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p dir="ltr">வட்டார, நகர, மாவட்ட அளவில் இக்கோரிக்கை தீவிரமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது. இவ்வியக்கத்தின் இறுதி நாளான ஜூலை 19 அன்று, மதுரையில் பல்லாயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து "உயிர் கோலம்" (Human Chain Shape) அமைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாணவர்கள் அனைவரும் வரிசையாக நின்று, வான்வழியாகப் பார்க்கும்போது காமராஜரின் உருவமும் "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் " என்ற வாசகமும் தெரியும் வகையில் இக்காட்சி வடிவமைக்கப்படவுள்ளது.</p>
<h2 dir="ltr"><strong>மீண்டும் மாணிக்கம் தாகூர் பேசுகையில் , </strong></h2>
<p dir="ltr">தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டணி தர்மத்தை எப்பொழுதும் மாண்போடு பின்பற்றும் கட்சி. நாங்கள் மற்றவர்களைப் போலத் தேவையில்லாத இடங்களில் வெளியில் பேசுவதில்லை. இடம், பொருள், ஏவல் அறிந்து எங்கு பேச வேண்டுமோ அங்கு தகுந்த மரியாதையுடன் எங்களது கருத்துக்களைப் பதிவு செய்வோம் என்று குறிப்பிட்டனர்.</p>
<p dir="ltr">மேலும், ராகுல் காந்தியின் தமிழக வருகை குறித்து வெளியான யூகங்கள் குறித்த கேள்விக்கு, ராகுல் காந்தி தமிழகம் வருவது உறுதி என்றும், ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ தேதியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே முறைப்படி அறிவிக்கும் என்றும், அதுவரை ஊடகங்கள் யூகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.</p>
<h2 dir="ltr"><strong>தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர்ந்து இணைவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் ; </strong></h2>
<p dir="ltr">அவை அனைத்தும் நீதிமன்றத்தில் வழக்காக இருப்பதாகவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் அது குறித்து கருத்து தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> - வில் இணைபவர்களை நாங்கள் தூய சக்தி என்று கூறவில்லை என்றும் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு நடைபெற்றதாகவும் ஆகையால் அதை திசை திருப்பாதீர்கள் என்று அவர் தெரிவித்தார்</p>
Source: Read Full Article