
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நெல் சாகுபடிதான். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் இந்த டெல்டா மாவட்டத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் நெல் சாகுபடியையே தங்களின் முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">ஆனால், காலநிலை மாற்றம், பருவமழை பொய்ப்பு, காவிரி நீர் வரத்து குறைவு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு, அதிகரித்து வரும் உற்பத்திச் செலவு மற்றும் நெல் கொள்முதல் பணப்பட்டுவாடாவில் ஏற்படும் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது சோளம் சாகுபடி. குறைந்த தண்ணீர், குறைந்த முதலீடு, விரைவான அறுவடை மற்றும் உடனடி பணப்பட்டுவாடா ஆகிய பல்வேறு காரணங்களால் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி டெல்டா பகுதிகளின் பல இடங்களில் விவசாயிகள் சோளம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/4114bb938727748d9d869f45d083ba301783917676550733_original.jpg" /></p>
<p style="text-align: justify;"><strong>நெல் சாகுபடியில் அதிக செலவு... லாபம் குறைவு</strong></p>
<p style="text-align: justify;">நெல் சாகுபடி என்பது அதிக முதலீடு மற்றும் அதிக உழைப்பைக் கோரும் பயிராகும். நாற்றங்கால் தயாரித்தல், நடவு, களையெடுத்தல், உரமிடுதல், பூச்சி மேலாண்மை, அறுவடை என ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் செலவு ஏற்படுகிறது. இதனுடன் கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூலி செலவும் விவசாயிகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகிறது.மேலும், அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட பிறகும் பணம் கிடைக்க தாமதம் ஏற்படுவதால், அடுத்த சாகுபடிக்கான முதலீட்டை ஏற்பாடு செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>சோளம்... விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை</strong></p>
<p style="text-align: justify;">இந்த சூழ்நிலையில்தான் சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு மாற்று வருமானப் பாதையாக உருவெடுத்துள்ளது. சோளம் குறைந்த அளவு நீரிலேயே சிறப்பாக வளரக்கூடிய பயிர் என்பதால், வறட்சிக் காலங்களிலும் அதிக பாதிப்பு இல்லாமல் மகசூல் கிடைக்கிறது. சோளத்திற்கு கோழித் தீவன உற்பத்தி நிறுவனங்கள், மாட்டுத் தீவன ஆலைகள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் எப்போதும் நிலையான தேவை இருப்பதால், அறுவடை செய்யப்பட்ட உடனேயே வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளைத் தேடி வந்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் உடனடியாக பணம் கிடைப்பது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது.</p>
<p style="text-align: justify;"><strong>வேங்கராயன்குடிகாட்டில் விவசாயியின் உழைப்பு நெகிழ்ச்சி</strong></p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர், உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் தனியாக களையெடுத்து வரப்பு அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காட்சி, தற்போதைய விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.</p>
<p style="text-align: justify;">சோளப் பயிர்கள் கதிர்விட்டு வளர்ந்து வரும் நிலையில், களைகளை அகற்றினால்தான் உரத்தின் முழுப் பயனும் பயிருக்கு கிடைக்கும் என்பதால், மண்வெட்டியுடன் தனியாகவே வயலில் இறங்கி பணியாற்றி வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தற்போது கூலி ஆட்களை வைத்தால் ஒரு நாளைக்கு 500 முதல் 700 ரூபாய் வரை செலவாகிறது. அந்த அளவுக்கு செலவு செய்யும் வசதி இல்லை. அதனால்தான் நானே காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்து வருகிறேன். இந்த முறை நல்ல விளைச்சல் கிடைத்து கடன்களை அடைத்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை," என்று உருக்கமாக தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;"><strong>சோளம் சாகுபடியின் முக்கிய நன்மைகள்</strong></p>
<p style="text-align: justify;">சோளம் சாகுபடிக்கு பல்வேறு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நன்மைகள் இருப்பதாக வேளாண் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நெற்பயிருடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அளவு நீர் போதுமானது. 90 முதல் 110 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும் குறுகிய காலப் பயிர். சந்தையில் எப்போதும் நிலையான தேவை இருப்பதால் உடனடி விற்பனை. அறுவடை முடிந்தவுடன் உடனடிப் பணப்பட்டுவாடா. பூச்சி தாக்குதல் மற்றும் பராமரிப்புச் செலவு நெற்பயிரைவிட குறைவு. வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய திறன் அதிகம். இந்த அம்சங்கள் காரணமாக தற்போது நெல் விவசாயிகள் மட்டுமின்றி கரும்பு உள்ளிட்ட பிற பயிர்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகளும் சோளத்தை நோக்கி திரும்பி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;"><strong>அரசு ஆதரவு தேவை என விவசாயிகள் கோரிக்கை</strong></p>
<p style="text-align: justify;">மாறிவரும் பருவநிலைச் சூழ்நிலைக்கு ஏற்ப தாங்களும் புதிய பயிர்களைத் தேர்வு செய்து வருகிறோம். ஆனால் அரசும் அதற்கேற்ப ஆதரவு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக சோளம் சாகுபடிக்குத் தேவையான உயர்தர விதைகள், மானிய விலையில் உரங்கள், நவீன களை எடுக்கும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வேளாண்மைத் துறை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>
<p style="text-align: justify;">மேலும், சோளத்திற்கும் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவித்து, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தொடங்கினால் விவசாயிகளின் வருமானம் மேலும் உயர்வதுடன், எதிர்காலத்தில் சோளம் சாகுபடி தமிழகத்தில் புதிய பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இயற்கைச் சவால்களையும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டு வாழ்வாதாரத்தை காப்பாற்ற புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள தஞ்சை விவசாயிகளின் இந்த மாற்றம், தமிழக வேளாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகவே வேளாண் நிபுணர்கள் கருதுகின்றனர்.</p>
Source: Read Full Article