
<h3><strong>தனியார் ஆம்னி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை</strong></h3>
<p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரியில் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்கள், வெளி மாநில மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். சென்னையை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரும் இங்கு மருத்துவம் பயின்று வருகிறார்.</p>
<p>இவர் விடுமுறைக்காக சென்னைக்கு சென்று விட்டு கடந்த 1 - ம் தேதி இரவு சென்னையில் இருந்து ஊட்டிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் முன் பதிவு செய்து பயணித்தார். இரவு 8.30 மணிக்கு சென்னையில் புறப்பட்டு நேற்று முன்தினம் (2ம் தேதி) அதிகாலை நீலகிரி மாவட்டத்திற்கு வந்தது.</p>
<p>பேருந்தின் மேல் பெர்த்தில் உறங்கி கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த மாணவி விழித்து சத்தமிட்டார். உடனே அந்த நபர் ஓடி விட்டார். சத்தம் கேட்டு மற்ற பயணிகள் எழுந்து பார்த்தனர்.</p>
<h3><strong>பேருந்து ஓட்டுனர் கைது</strong></h3>
<p>அப்போது மாணவி வெள்ளை நிற ஆடை அணிந்து இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரிடமும் விசாரணை நடத்தினர். ஓட்டுநர்களும் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த நிலையில் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.</p>
<p>அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மாற்று ஓட்டுநராக வந்த மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 40 ) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்கு பதிந்து கார்த்தி கேயனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>
Source: Read Full Article