
<h2 dir="ltr"><strong>திருமணம் மீறிய உறவு</strong></h2>
<p dir="ltr">ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு - ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 8 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.</p>
<p dir="ltr">எனவே வேலை காரணமாக பெரும்பாலும் விசாகப்பட்டினத்திலேயே தங்கியிருந்த அவர், அவ்வப் போது வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்த நிலையில் , அதே பகுதியைச் சேர்ந்த பண்டாரு கங்காதர் என்பவருடன் ஹேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>பின்னர் இருவரும் நெருங்கி பலகை வந்த நிலையில் நாளடைவில் அது திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஊர்மக்கள் அப்பலநாயுடுவிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டிற்கு வந்து மனைவியை கண்டித்து, அந்த உறவை முறித்துக் கொள்ளுமாறு எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.</p>
<h2><strong>உணவில் தூக்க மாத்திரை</strong></h2>
<p>அப்பலநாயுடு மீண்டும் வேலைக்காக விசாகப்பட்டினம் சென்ற பிறகும் , ஹேமாவும் கங்காதரும் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சந்தேகம் அதிகரித்ததால் , அப்பலநாயுடு தனது வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கே திரும்பி, வீட்டிலிருந்தபடியே கூலி வேலைகளுக்குச் சென்று வந்திருக்கிறார். இதனால், ஹேமாவால் காதலனை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதன் காரணமாக, ஆத்திரமடைந்த ஹேமா கணவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டு தனது காதலன் கங்காதருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பவத்தன்று இரவு கணவர் அப்பல நாயுடுவின் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை உறுதி செய்த பின்னர், ஹேமா தனது காதலனுக்கு தகவல் அளித்துள்ளார்.</p>
<p>அதைத் தொடர்ந்து, கங்காதர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் கூலிப்படை கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்து, அப்பல நாயுடுவின் கழுத்தை நெரித்தும், இரும்புக் கம்பியால் தாக்கியும் கொலை செய்திருக்கின்றனர்.</p>
<h2><strong>சித்தப்பா எங்கே ?</strong> </h2>
<p>கொலைக்குப் பிறகு, சம்பவத்தை மறைக்க ஹேமா வீட்டிலிருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்து, கணவரின் ஆடைகளை மாற்றி புதிய ஆடைகளை அறிவித்திருக்கிறார். அடுத்த நாள் காலை எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு வெளியே வந்து அக்கம் பக்கத்தினருடன் இயல்பாக பேசியும், காபி குடித்தும் ஹேமா நடித்திருக்கிறார்.</p>
<p>பின்னர் அப்பல நாயுடுவின் அண்ணன் மகன் வீட்டிற்கு வந்து, "சித்தப்பா எங்கே?" என்று கேட்ட போது, " இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார் " என்று ஹேமா தெரிவித்ததாக கூறப்படுகிறது</p>
<p>சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, அப்பலநாயுடு உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.</p>
<p>சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை கவனித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.</p>
<p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் , அப்பலநாயுடுவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் ஹேமாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.</p>
<h2><strong>கூலிப்படைக்கு பணம்</strong></h2>
<p>விசாரணையில், காதலன் கங்காதருடன் சேர்ந்து கணவரை கூலிப்படை மூலம் கொலை செய்ய திட்டமிட்டதை ஹேமா ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹேமாவையும், அவரது காதலன் கங்காதரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>
<p>தொடர்ந்து, கொலையில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைமறைவான மூன்று கூலிப்படை உறுப்பினர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பலநாயுடுவை கொலை செய்ய அவரது பணத்திலிருந்தே ஹேமா ஒரு லட்சம் எடுத்து கூலிப்படைக்கு கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>
Source: Read Full Article