
<h2><strong>சிறுமி காணவில்லை - காவல் நிலையத்தில் புகார்</strong></h2>
<p>ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்பு வரை முடித்து விட்டு அதன் பின்னர் பள்ளி படிப்பை தொடராமல் வீட்டில் இருந்துள்ளார். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அந்தியூரில் செயல்பட்டு வரும் பாத்திரக்கடை ஒன்றில் , சிறுமி வேலைக்கு சென்று வந்துள்ளார்.</p>
<p>இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மகள் மாயமானதாக சிறுமியின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுமி குறித்து விசாரணை நடத்தியதில் , திருநெல்வேலியை சேர்ந்த 20 வயது வாலிபர் வைகுந்தன் ( அச்சக உரிமையாளர் ) என்பவரை கைது செய்துள்ளனர்.</p>
<p>விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த ஐந்து மாதங்களாக தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், முதலில் நட்பாக பழகி வந்ததும் நாளடைவில், நட்பு காதலாக மாறியதும் தெரிய வந்துள்ளது.</p>
<h2><strong>" நம்மை பிரித்து விடுவார்கள் " </strong></h2>
<p>இந்த நிலையில் சிறுமியை சந்திக்க திருநெல்வேலியில் இருந்து, ஈரோடிற்கு வந்துள்ளார் வைகுந்தன். அந்தியூரில் சிறுமியை சந்தித்த பேசிவிட்டு, தன்னுடன் வருமாரு கேட்டுள்ளார். இங்கிருந்தால் நம்மை பிரித்து விடுவார்கள், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி சிறுமியை திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார்.</p>
<p>சிறுமி வர மறுத்த நிலையில் , ஆசை வார்த்தைகள் கூறி திருநெல்வேலிக்கு கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். திருநெல்வேலிக்கு சென்று சிறுமியை கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.</p>
<h2><strong>போக்சோ வழக்கு</strong></h2>
<p>இந்த நிலையில் திருநெல்வேலியில் சிறுமி இருப்பதை உறுதி செய்த அந்தியூர் போலீசார் திருநெல்வேலிக்கு சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் வைகுண்டம் (வயது 20) என்ற வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>அவரை பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணைக்கு பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பெயரில் சிறையில் அடைத்தனர்.</p>
Source: Read Full Article