
<h2 dir="ltr"><strong>கணவன் - மனைவி கருத்து வேறுபாடு</strong></h2>
<p dir="ltr">மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய பிரபாகரன். இவருக்கு அம்பலக்காரன்பட்டி அருகே கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கார்த்திகா என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.</p>
<p>இந்த தம்பதிக்கு 3 வயதில் தேஜாஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த ஓராண்டாக கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகா, தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.</p>
<h2><strong>" பழைய பிரச்சனைகளை மறந்து மீண்டும் ஒன்றாக வாழலாம் " </strong></h2>
<p>இந்த நிலையில் , கடந்த ஜூலை 3-ஆம் தேதி கார்த்திகா வீட்டிற்கு சென்று "இனி பழைய பிரச்சினைகளை மறந்து மீண்டும் ஒன்றாக வாழலாம்" என்று மனைவியிடம் சமாதானம் பேசிய பிரபாகரன், அவரை தனது சொந்த ஊரான கொட்டக்குடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p>
<p>ஆனால் அதன் பிறகு கார்த்திகா நீண்ட நாட்கள் அவரது தாய்க்கு போன் செய்யாமல் இருந்து நிலையில் , அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் கார்த்திகா பற்றிய தகவல் எதுவும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.</p>
<p>இந்த நிலையில் பிரபாகரன், கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் (VAO) செல்வத்திடம் நேரில் சென்று, தனது மனைவி கார்த்திகாவை வயல்வெளியில் வைத்து கொலை செய்து விட்டதாகவும், பின்னர் உடலை எரித்து சாம்பலாக்கி அருகிலிருந்த கிணற்றில் கரைத்துவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.</p>
<p>இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த VAO உடனடியாக மேலூார் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<h2><strong>பல்வேறு கோணங்களில் விசாரணை</strong></h2>
<p>பிரபாகரன் கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் வயல்வெளி மற்றும் கிணறு பகுதிகளில் தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உடல் எரிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து சாம்பல் மற்றும் பிற தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p>
<p>அவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கார்த்திகா எவ்வாறு கொலை செய்யப்பட்டார் ? கொலைக்கான உண்மையான காரணம் என்ன ? திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டாரா ? அல்லது வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p>தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் பிரபாகரனின் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் மற்றும் கரண் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்</p>
Source: Read Full Article