
<p>புதுச்சேரி: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் வகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனது கிளையைப் பரப்பத் தொடங்கியுள்ளது.</p>
<h2>ராமதாஸ் மகள், பேரன் அதிரடி சந்திப்பு</h2>
<p>பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகளும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மூத்த சகோதரியுமான காந்திமதி பரசுராமன் மற்றும் அவரது மகன் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் சமீபத்தில் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினர்.</p>
<p>அப்போது முதல்வர் ரங்கசாமி இருவரையும் ஆசீர்வதித்து, திருநீறு பூசி வரவேற்றார். தமிழகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்குவது மற்றும் பாமகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<h2>"நாங்கள் அந்த குடும்பமே இல்லை!" - முகுந்தன் பேட்டி</h2>
<p>முதல்வர் ரங்கசாமி உடனான சந்திப்பு குறித்து டாக்டர் ராமதாஸின் பேரன் முகுந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: "நாங்கள் ஐயாவை (ராமதாஸ்) நேரில் சந்தித்து நிலைமையைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். இனி அந்த கட்சிக்கு (பாமக) போகவே மாட்டோம்; அவர்களுடன் பேசவும் மாட்டோம். நாங்கள் அந்த குடும்பமே இல்லை என்று அறுத்துக்கூறிவிட்டோம். முதல்வர் ரங்கசாமியையுடனான சந்திப்பு தொடர்பான நல்ல செய்தி விரைவில் வெளியாகும்." என முகுந்தன் பரசுராமன் தெரிவித்தார்.</p>
<h2>முன்னாள் எம்.எல்.ஏ. அருள் என்.ஆர்.காங்கிரஸில் இணைப்பு?</h2>
<p>இதனிடையே, பாமக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினர்.</p>
<p>இதுகுறித்து அருள் கூறுகையில், "மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வரைச் சந்தித்து, எதிர்கால அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தேன். அவரது கட்சியில் இணைவது குறித்து தீவிரப் பரிசீலனை நடக்கிறது. இதற்கு எனது ஆதரவாளர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். சென்னையில் நடக்கும் விழாவில் எனது ஆதரவாளர்களுடன் பங்கேற்பேன்; என் முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும்," என்றார்.</p>
<p>அதேவேளையில், அருளின் நேர்முக உதவியாளர் விஜய் தனது முகநூல் பக்கத்தில், அருள் ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டதாகப் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.</p>
<h2>தமிழகத்தில் ரங்கசாமியின் 'மாஸ்டர் பிளான்' - பின்னணி என்ன?</h2>
<p>தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் காலூன்றுவது குறித்து அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:</p>
<p>கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை மற்றும் சேலம் ஆகிய வட மாவட்டங்களில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது.</p>
<h2>நீண்ட நாள் ஆசை:</h2>
<p>தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்பது ரங்கசாமியின் நீண்டகால விருப்பமாகும். தற்போது புதுச்சேரியில் கூட்டணி கட்சியான பாஜகவுடன் இணக்கமான சூழல் இல்லாததால், தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸை விரிவாக்கும் பணிகளை வேகப்படுத்த ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மற்றும் அதன் முக்கிய நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் ரங்கசாமி நெருங்கிய நட்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>
<h2>ஆகஸ்ட் 9-ல் மெகா அறிவிப்பு!</h2>
<p>பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட விழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>
<p>இந்த விழாவில், தமிழக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. அருள் முறைப்படி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாமகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அன்றைய தினம் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸில் இணைய உள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.</p>
Source: Read Full Article