
<p style="text-align: justify;">மும்பையிலிருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து, தாம்பரம் பகுதியில் போதைக்காக விற்பனை செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 420 போதை மாத்திரைகள், பட்டாக்கத்தி மற்றும் டம்மி துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p>
<h3 style="text-align: justify;">சுடுகாட்டில் போதை அலப்பறை : போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவல்</h3>
<p style="text-align: justify;">சென்னை தாம்பரம் சுடுகாட்டுப் பகுதியில் சில சமூக விரோதிகள், வலி நிவாரணி மாத்திரைகளைக் கரைத்து, வடிகட்டி, ஊசிகள் மூலம் நேரடியாக நரம்பில் செலுத்திப் போதை ஏற்றி வருவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. மேலும், போதை தலைக்கேறிய பின் அவர்கள் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களை மிரட்டி வருவதாகவும் புகார்கள் எழுந்தன.</p>
<p style="text-align: justify;">தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அங்கிருந்து சந்தேகத்திற்குரிய ஊசிகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், அங்கிருந்த நபர்கள் தப்பியோடியதால், அவர்களின் தொலைபேசி எண்களைப் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.</p>
<h3 style="text-align: justify;">மும்பை டூ சென்னை: செல்போன் சிக்னலால் சிக்கிய கும்பல்</h3>
<p style="text-align: justify;">இந்நிலையில், சந்தேகத்திற்குரிய 4 நபர்களின் தொலைபேசி எண்கள் மும்பையிலிருந்து சென்னை நோக்கி வருவதாக போலீசாருக்கு சிக்னல் கிடைத்தது. இதனையடுத்து, தாம்பரம் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மறைந்திருந்த போலீசார், சம்பந்தப்பட்ட 4 பேரையும் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், கைதானவர்கள் மனோஜ் குமார், ரூபன், சக்திவேல் மற்றும் ரஞ்சித் குமார் என்பது தெரியவந்தது.</p>
<h3 style="text-align: justify;">ரூ.50 மாத்திரை ரூ.500-க்கு விற்பனை கடத்தல் பாணி அம்பலம்</h3>
<p style="text-align: justify;">இவர்கள் ரயில் மூலம் மும்பைக்குச் சென்று, அங்கு 'TYDOL' என்ற வலி நிவாரணி மாத்திரைகளைக் குறைந்த விலைக்கு வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, மும்பையிலிருந்து கடப்பா வரை ரயிலிலும், கடப்பாவிலிருந்து பூந்தமல்லி வரை பேருந்திலும், அங்கிருந்து ஆட்டோ மூலமாகவும் தாம்பரத்திற்கு மாத்திரைகளைக் கடத்தி வந்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">மும்பையில் ஒரு மாத்திரை ரூ.50-க்கு வாங்கி வந்து, அதைத் தாம்பரம் பகுதியில் போதைக்காக 50 மாத்திரைகளை ரூ.500 வரை விற்று, இளைஞர்களிடம் பெரும் லாபம் பார்த்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">ஆயுதங்கள் பறிமுதல்: கேமராவைப் பார்த்துச் சிரித்த போதை ஆசாமிகள்</h3>
<p style="text-align: justify;">கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 420 போதை மாத்திரைகள், ஒரு பட்டாக்கத்தி, மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதை மாத்திரை விற்பனை செய்வதை யாராவது தட்டிக்கேட்டாலோ அல்லது புகார் அளிக்க முயன்றாலோ, இந்த ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.</p>
<p style="text-align: justify;">இந்தச் சம்பவத்தைச் செய்தியாளர்கள் வீடியோ எடுத்தபோது, "எதுக்கு வீடியோ எடுக்குற?" என நாக்கைக் கடித்து மிரட்டும் பாணியில் போதை ஆசாமிகள் சவால் விட்டுள்ளனர். மேலும், காவல்துறையினர் புகைப்படம் எடுத்தபோதும் எவ்வித பயமும் இன்றி, சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்து அலப்பறை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.</p>
Source: Read Full Article