
<h2><strong>காணாமல் போன 20 சவரன் நகை</strong></h2>
<p>கோவை மாவட்டம் வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உதயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார், இவர் மனைவியுடன் தனது மகளை காண வெளியூருக்கு சென்ற போது , வீட்டில் அவரது மகன் நிதீஷ்குமார் மட்டும் இருந்துள்ளார். நிதீஷ்குமாருக்கு நன்கு பழக்கமான சேக்கல் முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த துர்கா தேவியும், அவருக்கு தெரிந்த பொள்ளாச்சி நேதாஜி நகரை சேர்ந்த அஸ்கார் அலியும் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் 3 பேரும் பேசிக் கொண்டிருந்துள்ளார்கள்.</p>
<p>பின்னர் சிறிது நேரம் கழித்து நிதீஷ்குமாரும் , அஸ்கார் அலியும் பேசிக் கொண்டிருந்த போது துர்காதேவி மட்டும் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.</p>
<p>இந்த நிலையில் வெளியூருக்கு சென்றிருந்த நிதீஷ்குமாரின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். கல்லூரி மாணவரான நிதீஷ்குமார் தான் படிக்கும் பெங்களூருக்கு போய் விட்டார். வெளியூரில் இருந்து வந்த ஆசிரியர் உதயன் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை என தனது மகன் நிதீஷ்குமாரிடம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நிதீஷ்குமாரை வரச் சொல்லி வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.</p>
<h2><strong>போலீசாரின் விசாரணையில் சிக்கிய கும்பல்</strong></h2>
<p>இது குறித்து வால்பாறை போலீசார் நிதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வீட்டுக்கு யார் வந்து சென்றார்கள் என்று கேட்டனர். அப்போது துர்கா தேவி மற்றும் அஸ்கார் அளி வந்து சென்றதை தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து துர்காதேவி ( வயது 25), அஸ்கார் அலி ( வயது 30 ) , அவர்களுடன் இருந்த துளசிமணி ( வயது 38) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.</p>
<p>விசாரணையில் துர்காதேவி, அஸ்கார் அலி இருவரும் நகையை திருடியது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து திருடப்பட்ட 20 பவுன் நகையை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>
Source: Read Full Article