
<h3 dir="ltr"><strong>தனியாக வசித்து வந்த மூதாட்டி</strong></h3>
<p dir="ltr">கள்ளக் குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த - 60 வயது மூதாட்டி சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) மூதாட்டியின் மகளும் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில் மூதாட்டி கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். அருகில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதை வழக்கமாக வைத்திருந்த மூதாட்டி இரவு நேரங்களில் சிறுது நேரம் அக்கம் பக்கத்தினருடன் பேசிவிட்டு உறங்க செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.</p>
<p>இந்நிலையில் வழக்கம் போல அக்கம் பக்கத்தினருடன் பேசி விட்டு மூதாட்டி உறங்க சென்ற நிலையில் அவரது வீட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.</p>
<p>இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிடவே அருகில் இருப்பவர்களை வருவதை அறிந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பின்னர் சிறிது நேரம் அவரை தேடி அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை உறங்க சொல்லி விட்டு அவரது வீட்டை கண்காணித்து வந்திருக்கின்றனர்.</p>
<h3><strong>மடக்கி பிடித்த அக்கம் பக்கத்தினர்</strong></h3>
<p>மீண்டும் அதிகாலையில் அந்த மர்ம நபர் யாருக்கும் தெரியாமல் பதுங்கி மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்காக முயற்சி செய்த போது கண்காணித்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து வடபொண்பரப்பி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு இந்த நபரை விசாரித்த போது அவர் அருகில் உள்ள சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.</p>
<p>எனவே வடபொண்பரப்பி போலீசார் அலெக்ஸ் பாண்டியன் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல் வழக்கு பதிவு செய்து சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>
Source: Read Full Article