
<p>கேரளத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை மரணத்தில் திடுக்கிட வைக்கும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 3 மாதமாக இந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதைக் காணலாம். </p>
<p>கேரளம் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுமங்காட்டின் பனவூர் பகுதியில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. திருமணத்தை மீறிய உறவு இருந்த நிலையில் காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்த கொலையை குழந்தையின் தாய் அகிலா அரங்கேற்றியுள்ளார். கடந்த மே 29ம் தேதி மாலை அர்ஷித் பனவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தை அவசரமாக கொண்டு வரப்பட்டது. அதாவது குழந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது புரையேறி மயங்கி விட்டதாக அகிலா மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். </p>
<p>இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீ அவிட்டம் திருநாள் குழந்தை மாற்றப்பட்ட நிலையில் மே 30ம் தேதி அக்குழந்தை இறந்து விட்டது. இதுதொடர்பாக குழந்தையின் உறவினர்கள் சந்தேகத்தை எழுப்ப, காவல்துறைக்கு புகார் சென்றது. அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தையின் உடலில் ஏற்பட்ட உள் இரத்தப்போக்கு மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது. மேலும் குழந்தை உடலில் கடுமையான காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது. மொத்தம் 51 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.</p>
<p><iframe title="CM Vijay Trichy Full Speech | "கல்யாண வீட்டுலையும் புலம்பல்" ஸ்டாலின் மீது அட்டாக் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> FULL SPEECH" src="https://www.youtube.com/embed/iKdVTTlcY-o" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இதனைத் தொடர்ந்து மே 30 ஆம் தேதி இரவு, நெடுமங்காடு போலீசார் அகிலாவையும், அவரது காதலனையும் கைது செய்தனர். முதல் கணவர், அகிலா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும்போது தற்கொலை செய்துக் கொண்டார். இதன்பின்னர் குழந்தை அர்ஷத்துடன் வசித்து வந்த அகிலா கோயில் திருவிழாவில் இடம்பெறும் நடனக்குழுவில் ஆடுவது வழக்கமாக இருந்துள்ளது. </p>
<p>இந்த குழுவினரை அழைத்து செல்லும் வாகனத்தின் டிரைவராக பணியாற்றிய அஸ்கருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல வாழத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு இடைஞ்சலாக குழந்தை அர்ஷித் இருந்துள்ளான். இதனால் அகிலா, அஸ்கர் இருவரும் கடுமையாக கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர். </p>
<p><strong>Also Read: <a title="சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை" href="https://tamil.abplive.com/news/chennai/chennai-jewellery-theft-case-vijaya-murder-husband-suicide-attempt-tnn-262382" target="_blank" rel="noopener">சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை</a></strong></p>
<p>இதனிடையே இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. அவையாவும் போலீசாரை மட்டுமல்ல கேரள மக்களையும் அலற வைத்துள்ளது. அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பே அர்ஷித்தைக் கொல்ல முடிவு செய்ததாகவும், கடந்த ஒரு மாதமாக உடல்ரீதியான துன்புறுத்தலை செய்து வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளனர். </p>
<p>அஸ்கர் தான் குழந்தை அர்ஷித்தை தடையாக நினைத்துள்ளான். இந்த நிலையில் மே 29ம் தேதி குழந்தை அழுதுள்ளது. அப்போது அதன் தலையில் கட்டை ஒன்றைக் கொண்டு அஸ்கர் அடித்துள்ளான். அதில் குழந்தை இறக்க, வீட்டை சுத்தம் செய்து ஆதாரத்தை அழித்த பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். </p>
<p>கடந்த ஒரு மாதமாக குழந்தை அழும்போதெல்லாம் வாயில் துணியை திணித்து சத்தம் வெளியே கேட்காமல் அஸ்கர் தாக்கி வந்துள்ளான். குழந்தையை அடிப்பதற்கும் எரிப்பதற்கும் பயன்படுத்திய பொருட்களை ஒரு கால்வாயில் வீசியெறிந்த அவன், மீதமுள்ளவற்றை எரித்துள்ளான். </p>
<p>இந்த நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு அர்ஷித்தின் கைகள் இரண்டு முறிக்கப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தில் குழந்தை சைக்கிளில் இருந்து விழுந்து விட்டதாக அகிலா தெரிவித்திருக்கிறார். கட்டு போடப்பட்ட நிலையில் குழந்தையின் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பேருந்து நிலையத்தில் எடுத்த வீடியோவில் அகிலா, கையில் கட்டுப்போடப்பட்டிருந்த அர்ஷித்துடன் காணப்பட்டார். </p>
<p>அஸ்கர் குழந்தையை அடிக்கும்போதெல்லாம் அகிலா வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் குழந்தையை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் அஸ்கர் தனது முதல் மனைவியை மிக கொடூரமாக தாக்கி அப்பெண்ணை கோமா நிலைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இப்படிப்பட்ட கொடூரமான மனம் படைத்த அகிலா, அஸ்கர் இருவரையும் தூக்கிலிட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-what-happens-to-the-body-if-you-consume-ginger-and-lemon-together-262079" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article