10 கையெழுத்துக்குப் பதில் 7 மட்டுமே... அதிமுக விசுவாசத்தைக் காட்ட அருண்குமார் போட்ட ஸ்கெட்ச்? எடப்பாடி களத்தில் அதிரடி ட்விஸ்ட்!
சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) மிகப்பெரிய ஷாக் கிடைத்துள்ளது. எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு தொழில்நுட்பக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த ரிஜெக்ஷன் விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி இருப்பதாகக் கூறி, அக்கட்சியின் தொண்டர்கள் எடப்பாடியில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முன்னாள் அதிமுக பிரமுகரான அருண்குமார், திட்டமிட்டே மனுவைத் தவறாகப் பூர்த்தி செய்து த.வெ.க-வை எடப்பாடி தேர்தல் களத்திலிருந்து அவுட் செய்துள்ளதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேட்புமனு பரிசீலனையின் போது, அருண்குமார் தாக்கல் செய்திருந்த மனுவில் முன்மொழிபவர்கள் பகுதியில் 10 பேரின் கையெழுத்து இருக்க வேண்டிய இடத்தில், வெறும் 7 பேரின் கையெழுத்து மட்டுமே இருந்ததை தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தேர்தலின் அடிப்படை விதியையே மீறும் செயல் என்பதால், அதிகாரிகள் அந்த மனுவை உடனடியாக ‘ரிஜெக்ட்’ செய்தனர். ஒரு தொகுதியில் முக்கியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுபவர், இவ்வளவு மெத்தனமாக மனுத்தாக்கல் செய்தது அங்கிருந்த மற்ற வேட்பாளர்களை ‘ஆச்சரியத்தில்’ ஆழ்த்தியது.
இதற்கிடையே, பரிசீலனை நடந்துகொண்டிருந்த போதே வேட்பாளர் அருண்குமார் திடீரென ‘ஸ்பாட்’டிலிருந்து மாயமானார். அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில், அவர் எங்கே சென்றார் என்பது குறித்துத் த.வெ.க நிர்வாகிகளுக்குத் தெரியவில்லை. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, மாறாகத் தனது பழைய கட்சியான அதிமுக மீதான விசுவாசத்தை நிரூபிக்கவும், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும் அருண்குமார் போட்ட ‘மாஸ்டர் பிளான்’ இது எனத் தவெக தொண்டர்கள் ஆவேசமாகப் பேசி வருகின்றனர்.
எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் பிரிக்கும் வாக்குகள் அதிமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது தவெக போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. “அதிமுகவில் இருந்து வந்த ஒருவரை நம்பி சீட் கொடுத்ததற்கு இப்போது பெரிய ‘ஆப்பு’ கிடைத்துள்ளது. திட்டமிட்டே கட்சியைச் சொதப்ப வைத்துத் தற்கொலை செய்துகொண்டார் அருண்குமார்,” எனத் தவெக மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்குத் புகார் அனுப்பியுள்ளனர்.
இந்த ‘ஹை-வோல்டேஜ்’ அரசியல் நாடகத்தால் எடப்பாடி தொகுதியில் தற்போது பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஒரு கட்சியின் வேட்புமனுவைத் திட்டமிட்டுத் தள்ளுபடி செய்ய வைத்தது ஜனநாயகத்திற்கே ஆபத்தானது எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அருண்குமாரின் இந்தத் திடீர் ‘எஸ்கேப்’ மற்றும் வேட்புமனு குளறுபடி, எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தல் களத்தில் ஒரு ‘ஈஸியான’ பாதையை அமைத்துக் கொடுத்துள்ளதா என்ற விவாதம் இப்போது சேலம் முழுவதும் ‘ஹாட்’ ஆகப் பறக்கிறது.
