‘30 ஆயிரத்திற்கு 10 லட்சம் வட்டி’.. கூலித்தொழிலாளி குடும்பத்திற்கு கந்துவட்டி நரகம்: பாமக நிர்வாகிகள் அட்டகாசம் - போலீஸ் சப்போர்ட் என பகீர் குற்றச்சாட்டு!

‘30 ஆயிரத்திற்கு 10 லட்சம் வட்டி’.. கூலித்தொழிலாளி குடும்பத்திற்கு கந்துவட்டி நரகம்: பாமக நிர்வாகிகள் அட்டகாசம் - போலீஸ் சப்போர்ட் என பகீர் குற்றச்சாட்டு!
மீட்டர் வட்டி, மின்னல் வட்டியால் நிலைகுலைந்த ஏழை குடும்பம்; பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி - சேலம் எஸ்பி-க்கு கண்ணீர் மல்க கோரிக்கை!

சேலம்: சேலம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரு ஏழைத் தொழிலாளியின் குடும்பமே தற்கொலை விளிம்பிற்குச் சென்றுள்ள சம்பவம் பெரும் ‘பரபரப்பை’ ஏற்படுத்தியுள்ளது. வெறும் 30 ஆயிரம் ரூபாய் கடனுக்காக, சுமார் 10 லட்சம் ரூபாய் வரை வட்டி கேட்டு மிரட்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்குத் துணை போகும் காவல்துறை அதிகாரிகளின் செயல், மாவட்டத்தையே ‘ஷாக்’ ஆக்கியுள்ளது. ‘பணபலம், அரசியல் பலம்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு கூலித்தொழிலாளியின் உயிரைப் பறிக்கத் துடிக்கும் கந்துவட்டி கும்பலின் ‘அட்டாக்’ குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பப்பட்டி, பழனிகவுண்டனூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கல் உடைக்கும் கூலி வேலை செய்து வரும் இவர், தனது குடும்பக் கஷ்டத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரகு மற்றும் சேட்டு ஆகிய இருவரிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். கடன் கொடுத்த இருவரும் பாமக-வின் ‘பவர்ஃபுல்’ நிர்வாகிகள் எனக் கூறப்படுகிறது. கடன் வாங்கும்போது வெற்று ப்ரோ நோட்டுகளில் கையெழுத்து வாங்கிக்கொண்ட இந்த கும்பல், கடந்த 8 மாதங்களில் மட்டும் சுமார் 4 லட்சம் ரூபாயை வட்டியாக மிரட்டிப் பறித்துள்ளது. மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, நாள் வட்டி எனப் பல்வேறு பெயர்களில் வெங்கடேஷின் ரத்தத்தை உறிஞ்சி வந்த இந்தக் கும்பல், தற்போது வட்டி மட்டுமே 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் என ‘கெடு’ விதித்துள்ளது.


கடந்த வாரம் வெங்கடேஷை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்ற ரகு மற்றும் சேட்டு கும்பல், அவரை ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்து ‘டார்ச்சர்’ செய்துள்ளனர். அங்கு வைத்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அதில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக எழுதி மிரட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி, வெங்கடேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை ஆபாசமாகத் திட்டியும், ‘கொலை செய்துவிடுவோம்’ என அடியாட்களை வைத்து மிரட்டியும் வந்துள்ளனர். இந்தத் தொடர் ‘பிரஷர்’ காரணமாக மனமுடைந்த வெங்கடேஷ், குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்து, இறுதியில் தான் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து ‘சீரியஸ்’ ஆனார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வெங்கடேஷை, அந்த கந்துவட்டி கும்பல் மருத்துவமனைக்கே சென்று மிரட்டியதுதான் உச்சக்கட்டக் கொடுமை. இது குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாகவே ‘சைலண்ட்’ ஆகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ‘பணத்தைக் கொடுக்கும் வழியைப் பார், இல்லையென்றால் உன் குடும்பத்தையே உள்ளே தள்ளுவோம்’ எனப் போலீசார் தன்னை மிரட்டுவதாக வெங்கடேஷ் ‘பகீர்’ குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காவல்துறையின் இந்த ‘ஒன்சைட்’ நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் வங்கிகளுக்கே ஆர்பிஐ (RBI) பல நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பைனான்ஸ் என்ற போர்வையில் ஊருக்கு ஊர் செயல்படும் இந்த கந்துவட்டி கும்பல்களுக்கு எந்தக் கடிவாளமும் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக ‘என்ட்ரி’ கொடுத்து, தனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வெங்கடேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். ஏழைத் தொழிலாளியின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த கந்துவட்டி ‘மாஃபியா’ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- ஆ.மாரியப்பன்
புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks