நடைபாதையைச் சோதனையிட வழக்கறிஞர் ஆணையர்கள் நியமனம்; பொதுமக்களுக்காக அதிகாரிகளின் அலைபேசி எண்களைப் பலகையில் வைக்க உத்தரவு!
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே அமைந்துள்ள என்.எஸ்.சி போஸ் சாலை நடைபாதைகளில் அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் முளைத்தால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றக் கோரித் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது வெறும் கண் துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது என்பதில் நீதிமன்றம் இன்று காட்டிய உறுதி, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணையின் போது மாநகராட்சி தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட அறிக்கையில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி இதற்கென ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், என்.எஸ்.சி போஸ் சாலை இனி 'வியாபாரம் செய்யக் கூடாத பகுதி' (Non-Vending Zone) என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், கடைகள் அகற்றப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவை மீண்டும் முளைத்து விடுவதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்குப் புகாராகக் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவில், ஆக்கிரமிப்புகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது அலைபேசி எண்களை என்.எஸ்.சி போஸ் சாலையில் பொதுமக்கள் பார்வைக்குத் தெரியும்படி தகவல் பலகையில் வைக்க வேண்டும் என ஆணையிட்டனர். மேலும், நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பதை நேரடியாகக் கண்காணிக்க இரண்டு வழக்கறிஞர்களைக் 'கௌரவ ஆணையர்களாக' நியமித்த நீதிபதிகள், அவர்கள் அளிக்கும் அறிக்கையில் மீண்டும் கடைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
.jpg)