விளம்பர நாடகம் மட்டுமே நடக்கிறது' - அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் 6,000 நோயாளிகள்!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்திலேயே மிக முக்கியமான மருத்துவ மையமாகத் திகழ்கிறது. இங்கு தினமும் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்கள், குடிநீருக்காகவும், கழிவறை பயன்பாட்டிற்காகவும் தண்ணீரின்றி ஒவ்வொரு அறையாக அலைந்து திரியும் அவலநிலை நீடித்து வருகிறது. போதிய அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்காமல், தமிழக அரசு சுகாதாரத்துறையை மெத்தனப் போக்குடன் கையாளுவதாகப் பொதுமக்கள் ஆதாரபூர்வமாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முன்னதாக, கடந்த மே மாதம் தேசிய மருத்துவ ஆணையம் (NMC), தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 34 கல்லூரிகளில் போதிய மருத்துவர்கள் இல்லாதது மற்றும் உள்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. போதாக்குறைக்கு, மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இவ்வளவு பெரிய நெருக்கடி இருந்தும், ஆளும் திமுக அரசு அடிப்படை வசதிகளை மேம்படுத்த உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் அவ்வப்போது ஆய்வுகள் என்ற பெயரில் ஒரு விளம்பர நாடகத்தை அரங்கேற்றிவிட்டுச் செல்வதோடு தனது பணி முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொள்கிறார். அமைச்சரின் இந்த பி.ஆர். (PR) ஸ்டண்ட் களத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.
மருத்துவமனையில் நிலவும் இந்த இக்கட்டான சூழல் காரணமாக, நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் சென்று அதிக விலை கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “அரசு மருத்துவமனைகளில் சுகாதாரமான குடிநீர், தூய்மையான வளாகம், போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் தலையாய கடமை; ஆனால் இங்கு எல்லாமே கேள்விக்குறியாக உள்ளது” என்று வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாகச் சேலம் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் உள்கட்டமைப்புச் சிக்கல்களைத் தீர்க்கவும், தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் திமுக அரசை மக்கள் வலியுறுத்துகின்றனர்.
.jpg)