பணம் தர மறுத்தால் தகராறு; போக்குவரத்து நெரிசலால் மன உளைச்சல் எனப் புகார்!
கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில், பிச்சை எடுப்பவர்கள் மற்றும் வாகனங்களைச் சுத்தம் செய்பவர்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அவினாசி, சத்தி, திருச்சி, மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில், கைக்குழந்தையுடன் பெண்கள் பிச்சை எடுப்பதும், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கார் கண்ணாடிகளைச் சுத்தம் செய்துவிட்டு பணம் கேட்டு மிரட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.
பணம் தர மறுப்பவர்களை வாகனங்களை நகர விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளைப் பேசுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக விரோதச் செயலாக மாறியுள்ள இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
