பொள்ளாச்சியில் பழைய பாரம்பரியத்தை மீட்டெடுத்த புதுமணத் தம்பதியினர்; பொதுமக்கள் ஆச்சரியம்!
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மாட்டு வண்டிகள் மக்களின் முக்கியப் போக்குவரத்துச் சாதனமாக இருந்தன. அதுமட்டுமின்றி, திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வீட்டிற்குச் செல்வது ஒரு பாரம்பரிய வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் இந்த வழக்கம் மறைந்து, தற்போது கார்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த நிலையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவருக்கும், கோவையைச் சேர்ந்த காவியா என்பவருக்கும் நேற்று கரட்டுமடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன், மணமகன் சிவப்பிரகாஷ் தனது பூர்வீக வீடான அர்த்தநாரிபாளையத்திற்கு தனது புதுமனைவியுடன் மாட்டு வண்டியில் செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, மணமகன் சிவப்பிரகாஷ் தனது மனைவி காவியாவை மாட்டு வண்டியில் அமர வைத்து, தானே வண்டியை ஓட்டிச் சென்றார். கரட்டுமடம் முதல் அர்த்தநாரிபாளையம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த மாட்டுவண்டிப் பயணம் தொடர்ந்தது. திருமணமான புதுமணத் தம்பதியினர் மாட்டு வண்டியில் சென்றதைக் கண்ட அந்த வழியாகச் சென்றவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
