கடந்த 2 மணி நேரத்தில் 3 நாடுகளில் நிலநடுக்கம் - ஆசிய கண்டத்தில் தொடர் நிகழ்வு!
ஆசிய கண்டத்தில் அண்மைக் காலங்களாக நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் உருவானது மக்களைப் பீதியில் ஆழ்த்திய நிலையில், தற்போது மீண்டும் ஆசிய கண்டத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மணி நேரத்தில், ஆசிய கண்டத்தின் மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திராவில் பூமிக்கு அடியில் 106 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது.
இதே போன்று, இந்தியாவின் அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் இரவு 9.25 மணியளவில் 3.8 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று நிலநடுக்கங்களாலும் இதுவரை எந்தவிதமான உயிர் மற்றும் பொருள் சேதங்கள்பற்றிய தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், ஆசிய கண்டத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகள்குறித்து உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.