"வாகன சோதனையா..? ஓய்வு நேரமா..? விஜயமங்கலம் டோல்கேட்டில் வணிகவரித்துறை அதிகாரிகள் காரில் தூங்கிய காட்சி வைரல்!"
விஜயமங்கலம் டோல்கேட்டில், வேலை நேரத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் தங்களது பணியை மறந்து தமிழக அரசின் காரில் ஏசி போட்டு அயர்ந்து உறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகிறது.
சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், விஜயமங்கலம் டோல்கேட் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு வணிகவரித்துறை சுற்றும் படை அதிகாரிகள், நள்ளிரவு 1:30 மணியளவில் தங்கள் இன்னோவா காரில் தூங்கிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இரவு நடந்த இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பொதுவாக, சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, சேலம், சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் ஒரு பரபரப்பான வழித்தடமாகும். இரவு நேரத்திலும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இப்பகுதியில், வணிகவரித்துறை அதிகாரிகள் சுற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில், விஜயமங்கலம் டோல்கேட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளை நிற இன்னோவா காரில், அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. காரின் இன்ஜின் ஆன் செய்யப்பட்டு, ஏசி இயக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
சோதனைகள் ஓரளவுக்கு முடிந்த பின்னரா அல்லது பணிச்சுமையால் ஏற்பட்ட அயற்சியால் உறங்கினரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் வணிகவரித்துறையின் அதிகாரிகள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொறுப்புடன் செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகள், பணி நேரத்தில் அலட்சியமாக இருப்பது, அரசின் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
in
தமிழ்நாடு