
<p style="text-align: justify;">கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸிற்கு நெருக்கமானர்கள் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தவெக ஆட்சி அமைந்ததும் பரபரப்பு புகார் பெறப்பட்டது. அதனையடுத்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு என்ற அமைப்பை நடத்தி, அன்பில் மகேஸ்க்கு விழா எடுத்த BT அரசகுமார் என்பவரை கைது செய்தது போலீஸ். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நூறு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து பிடி அரசகுமார் மீது குண்டர் சண்டம் பாய்ந்தது, ஜாமினில் வெளியே வர முடியாத அளவிற்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>முத்துகுமாருக்கும் தொடர்பு என தகவல்</em></strong></p>
<p style="text-align: justify;">அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அன்பில் மகேஸிடம் பணியாற்றிய தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார் என்பவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து அவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இந்நிலையில், இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், இன்று திடீரென முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டிலேயே காவல்துறையினர் சோதனை நடத்தியிருப்பதுடன் அவர் மீது நம்பிக்கை மோசடி, ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பது திமுகவினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அன்பில் மகேஸ் மறுத்திருந்தார். </p>
<p style="text-align: justify;"><strong><em>யார் இந்த வாளாடி கார்த்திக் ?</em></strong></p>
<p style="text-align: justify;">குறிப்பாக, காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், அன்பில் மகேஸின் உதவியாளராக இருந்த வாளாடி கார்த்திக் என்பவர் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து யார் அந்த உதவியாளர் வாளாடி கார்த்திக் என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.</p>
<p style="text-align: justify;">வாளாடி கார்த்திக் அன்பில் மகேஸின் உதவியாளர் மட்டுமல்ல. அவர் மகேஸின் நெருங்கிய உறவினர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கும் வாளாடி என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால், தனது பெயருக்கு முன்னர் வாளாடி என்பதை சேர்த்து வைத்திருக்கிறார் கார்த்திக். தனது நெருங்கிய உறவினர் என்பதால், தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவர்களின் பட்டியலில் மிகுந்த முக்கியத்துவத்தை கார்த்திக்கு கொடுத்து வைத்திருந்தார் அன்பில் மகேஸ். துறை, கட்சி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் வாளாடி கார்த்திக், அன்பில் மகேஸ் சார்பாக முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>அன்பில் மகேஸின் வலதுகரம்</em></strong></p>
<p style="text-align: justify;">அன்பில் மகேஸ் பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாக செயல்படுவதற்கு பல்வேறு முக்கிய நபர்கள் அவரது பின்னணியில் காரணமாக இருந்தனர். அதில் ஒருவர்தான் வாளாடி கார்த்திக் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். குறிப்பாக, அன்பில் மகேஸிற்கு வரும் பிரச்னைகளையெல்லாம் சமாளித்து, அவர் அமைச்சராக இருந்தபோது நெருக்கடிகள் வராமல் பார்த்துக்கொண்டதில் முக்கிய பங்கு வாளாடி கார்த்திக்கு உண்டு. அதனால் வாளாடி கார்த்திக் மீது அன்பில் மகேஸ் தனிப்பிரியம் வைத்திருந்தார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>வாளாடி கார்த்திக்கை வைத்து அன்பில் மகேஸூக்கு செக் ?</em></strong></p>
<p style="text-align: justify;">அதனால், அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு நடத்தும் அதே நேரத்தில் வாளாடி கார்த்திக் வீட்டிலும் ரெய்டு நடத்தி வருகிறது காவல்துறை. அதே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் வாளாடி பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p style="text-align: justify;">அன்பில் மகேஸின் செயல்பாடுகளை முடக்கவும், வரும் இடைத் தேர்தலிலும், திருச்சி கிழக்கில் விரைவில் அறிவிக்கப்படவிருக்கக்கூடிய தேர்தலிலும் அன்பில் மகேஸ் பணியாற்றுவதை தடுக்கும் நோக்கத்திலுமே அவரது உறவினரும் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான வாளாடி கார்த்திக்கிற்கு காவல்துறையை வைத்து கட்டம் கட்டியிருக்கிறது <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு என்கிறார்கள் அன்பில் மகேஸின் விசுவாசிகள்.</p>
Source: Read Full Article