
<p>திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட கொலைக் குற்றங்கள் அதிகமாக நடந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்துள்ளார். </p>
<p>2026ம் ஆண்டில் 8 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நெல்லை மாவட்டத்தில் கொலை குற்றங்கள் அதிகரித்து உள்ளது. இது ஒரு முக்கியமான விஷயம் என்பதை மாவட்ட மக்கள் உணர வேண்டும். பாதை பிரச்னை, பணம் கொடுக்கல் -வாங்கல் பிரச்னை, தனிப்பட்ட வேறு விஷயங்கள் காரணமாக கோபத்தில் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டதால் நிகழ்ந்த குற்றங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது. ரவுடி தொடர்புடைய குற்றங்கள் குறைந்துள்ளது. </p>
<p>உணர்ச்சி வசப்பட்டதால், கோபப்பட்டதால் ஏற்பட்ட கொலை வழக்குகள் தான் அதிகமாகியுள்ளது. இதனால் பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். காவல்துறையில் வாரத்தில் அனைத்து நாட்களும் உங்களிடமிருந்து புகார் மனுக்களைப் பெறுவோம். 100 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம். வீட்டுக்கே வந்து நாங்கள் புகார்களை விசாரிப்போம். அதுமட்டுமல்லாமல் மாதத்தில் தலா ஒரு புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 2 நாட்களில் உயரதிகாரிகளை நீங்கள் அலுவலகத்தில் வந்து பார்க்கலாம். நாங்களே வேண்டுமானால் முகாம் நடத்துகிறோம். </p>
<p><iframe title="Anbil Mahesh On Vijay | "கொடநாடு வாட்ச்மேன்லாம் பேசுதுறதுதான் வேதனையா இருக்கு" அன்பில் மகேஸ் அட்டாக்" src="https://www.youtube.com/embed/9FCmH6ymNDA" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>எந்த பிரச்னையாக இருந்தாலும் நீங்கள் போலீசிடம் சொன்னால் சரியான தீர்வை நாங்கள் சொல்வோம். இந்த மாதிரி சின்னதோ, பெரியதோ சம்பந்தப்பட்டவர்களே பேசி பெரிது பண்ணியதால் நடப்பாண்டு கொலை வழக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. பழிவாங்கும் நோக்கம், ரவுடி கொலை போன்றவை குறைந்துள்ளது. ஒரு சில வழக்குகளில் மது போன்ற போதைப் பழக்கமும் காரணமாக இருந்துள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடந்த 3 மாதங்களாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கிட்டதட்ட 339 குற்றவாளிகளை இந்த காலக்கட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பியுள்ளோம். அதேபோல் பெயில் ரத்துச் செய்வதை உயரதிகாரிகளோடு ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். </p>
<p>கொடுக்கல் - வாங்கல், நிலப்பிரச்னை, குடும்ப பிரச்னை தொடர்பாக வாரந்தோறும் உளவு மீட்டிங் நடத்துகிறோம். ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்படும் தகவல்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி இந்த மாதிரி தீர்வு இருக்கிறது. அப்படி செய்து சரி செய்யுங்கள் என அசாம்பாவிதங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் செயல்படுகிறோம். அதனால் மக்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் அதனை சம்பந்தப்பட்டவர்கள் பேசி தீர்க்காமல் எங்களிடம் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி கூறியுள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/can-these-problems-be-stopped-with-pineapples-274220" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article