
<p>மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. அதிலும் பண்டிகை நாட்கள் என்றால் டாஸ்மாக் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். எனவே அரசின் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாகவே டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதே நேரம் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கையில் கவனம் செலுத்தியது. </p>
<p>அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கிய அரசு, இனி பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு அந்த நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. அதே நேரம் தற்போது டாஸ்மாக் பார்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார் வரும் நிலையில், டாஸ்மாக் பார்களில் தரமான உணவுகள் வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் விரைவில் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் விடப்படவுள்ள நிலையில், மதுப்பிரியர்கள் விரும்பி கேட்கும் உணவுகளை குறைந்த விலையில் விநியோகம் செய்யும் வகையில் பார் டெண்டர்களில் உணவகம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கவுள்ளது. </p>
<p>இந்த நிலையில் இது தொடர்பாக மது விலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், மதுபான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில், மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பவர்கள் மீது சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என கூறினார். அடுத்தக்கட்டமாக மதுபாட்டில் திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p>
<p>அந்த வகையில் சுமார் 4 ஆயிரம் மதுபானக்கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகவும், வருகிற அக்டோபர் 5ஆம் தேதி அந்த டெண்டர் திறக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரம் வைக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் கடைகளில் சரியான நடைமுறைக்கு வந்த பிறகு மன மகிழ் மன்றம் எனப்படும் எப்.எல் 2 கடைகளின் மீது கவனம் செலுத்தப்படும் என கூறினார். தற்போது டாஸ்மாக் கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து புதிதாக பார்களுக்கான டெண்டர்களில் பார்களோடு சேர்த்து உணவகம் திறக்கவும் அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனையில் உள்ளதாகவும், இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/how-often-should-you-restart-your-smartphone-274589" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article