
<p>நாம் தமிழர் கட்சியினரை ஜீரோ என சொல்லி விட்டு, மறுபக்கம் ஹீரோ என கூறிக்கொள்ளும் தவெகவினர் பயப்படுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். </p>
<h2><strong>திரள்நிதி கேட்ட சீமான்</strong></h2>
<p>3 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களிடையே திரள்நிதி கேட்டு அவர் பதிவு இன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் தற்போது தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. வழக்கம்போல இந்தத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களத்தில் எதிர்கொள்கிறது. தேர்தல் களத்தை விட்டு வெளியேறுவது எங்களுடைய அரசியல் அல்ல. தேர்தல் தோல்விகளை நாங்கள் நிரந்தரத் தோல்வியாகப் பார்ப்பதில்லை; தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம். எப்போதும்போல எமது மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டு இம்முறையும் தனித்துக் களத்தில் போட்டியிடுகிறோம்.</p>
<p><iframe title="TVK Sathyabama vs Admk | துரோகி ஒழிக!"அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.. ஷாக்கான <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> சத்தியபாமா" src="https://www.youtube.com/embed/a1wVWb5pYwg" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>மக்களை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல</strong></h2>
<p>மதுராந்தகம்தொகுதியில் கோ.ஜானகிராமன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மு.கார்த்திகா, புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியில் ச.கார்த்திக் குமாரி ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். இந்தத் தேர்தலை ஒரு சாதாரண இடைத்தேர்தலாக மட்டும் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் எதற்காக வந்தது என்பதை மக்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.</p>
<p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை விட்டு விலகுகிறார்கள். அதன் பிறகு வேறொரு கட்சியில், குறிப்பாக ஆளும் கட்சியில் இணைந்து, மீண்டும் அதே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.அப்படியானால் அவர்களுக்கு மக்களுக்கான சேவை முதன்மையா? அல்லது தங்களுக்கான தேவை முதன்மையா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.<br />நாங்கள் எங்கு நின்றாலும், எதைச் செய்தாலும் மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என்ற மெத்தனப்போக்கோடு மக்களைக் குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையதல்ல.</p>
<h2><strong>ஜீரோவை பார்த்து பயப்படும் ஹீரோக்கள்</strong></h2>
<p>பல கட்சிகளுக்கும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் நாம் தமிழர் கட்சிக்குச் சட்டமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை. மக்களோடு மக்களாக மழையிலும், பனியிலும், வெயிலிலும் நின்று, மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசி, உறக்கத்தைத் தொலைத்து, அவர்களுக்காகப் போராடியிருக்கிறோம்.</p>
<p>அப்படிப்பட்ட எங்களை இன்று ஆட்சியில் இருப்பவர்கள் ஜீரோ என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த ஜீரோவைப் பார்த்துத்தான் அந்த ஹீரோக்கள் பயப்படுகிறார்கள். நாம் பேசிய அரசியலின் தேவை இன்று மக்களுக்குப் புரிகிறது. இவையெல்லாம் என்ன என்பதைப் பற்றிய புரிதலே இல்லாதவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.</p>
<p>நாம் தமிழர் கட்சியிடம் படை இருக்கிறது. கருத்து இருக்கிறது. களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை இருக்கிறது. எல்லாம் இருந்தும் எங்களுக்கிருக்கிற ஒரே பின்னடைவு பொருளாதார வலிமைதான். எப்போதும்போல எமது மக்கள் வலிமையாகவும், வளமாகவும், இனமாகவும், பணமாகவும் எம்மோடு இணைந்து நின்று எங்கள் கைகளை வலிமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்” என சீமான் அதில் தெரிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-dont-do-this-suffering-from-migraines-274493" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article