
<p style="text-align: justify;">தமிழக அரசியல் வரலாறுகளில் தவிர்க்க முடியாத முடியாத இடம் சட்டப்பேரவை சபாநாயகர் இருக்கைக்கு உண்டு. அதில் அமர்பவர்களுக்கு முதலமைச்சர்களே வணக்கம் சொல்லி, வளைந்துபோக வேண்டிய வானளாவிய அதிகாரமும் உண்டு. அப்படிப்பட்ட அதிகார மையமாக செயல்படும் சபாநாயகர் இருக்கையில் இதுவரையில் ஆண்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இந்த நிலையில், தவெக ஆட்சியில் மாற்று சபாநாயகராக நேற்று அந்த இருக்கையில் அமர்ந்து வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார் தவெக எம்.எல்.ஏ சத்தியபாமா.</p>
<p style="text-align: justify;"><strong><em>யார் இந்த சத்தியபாமா ?</em></strong></p>
<p style="text-align: justify;">அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான சத்தியபாமா, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் அணியை ஆதரித்து அவருடன் இணைந்தார். இன்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கும் இவர்தான், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் எம்.பி. 2001ல் முதன் முதலில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு அரசியல் பதவிகளில் அடியெடுத்து வைத்த சத்தியபாமாவிற்கு அடுத்தடுத்த உயர்வுகள் அரசியலில் தேடி வந்தன. எம்.எஸ்.சி. வரை படித்தவரான சத்தியபாமாவிற்கு 2007ஆம் ஆண்டு ஈரோடு புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. மீண்டும் 2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் செங்கோட்டையன் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட சத்தியபாமா, ஒன்றிய குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>திருப்பூரின் முதல் பெண் எம்.பி – வாய்ப்பு கொடுத்த ஜெயலலிதா</em></strong></p>
<p style="text-align: justify;">2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியா ; இல்லை இந்த லேடியா என ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது திருப்பூர் தொகுதியில் போட்டியிட சத்தியபாமாவிற்கு வாய்ப்பு வழங்கியது அதிமுக. அந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளர் தினேஷை ஒரு லட்சத்தில் 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தொகுதியின் முதல் பெண் மக்களவை உறுப்பினர் என்ற அடையாளத்தோடு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். கிட்டத்தட்ட 85 சதவீதம் வருகை பதிவேடு 469 கேள்விகள் எழுப்பி, 119 விவாதங்களில் பங்கேற்று கவனம் ஈர்த்தவர்.</p>
<p style="text-align: justify;"><strong><em>தவெக-வில் இணைந்த சத்தியபாமா</em></strong></p>
<p style="text-align: justify;">அதிமுக ஆட்சி காலத்தில் செங்கோட்டையனின் விசுவாசியாக இருந்த சத்தியபாமாவிற்கு பெரிய அளவில் வாய்ப்புகளை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் திமுக் ஆட்சியின்போதும் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராகவே தொடர்ந்தார். செங்கோட்டையன் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வில் இணைந்தபோது சத்தியபாமாவும் அவருடன் இணைந்தார். சட்டமன்ற தேர்தலிலும் திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>அமைச்சர் ரேஸில் இருந்த சத்தியபாமா?</em></strong></p>
<p style="text-align: justify;">செங்கோட்டையனுடன் சேர்த்து சத்தியபாமாவிற்கு அமைச்சர் பதவி தரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அது கிடைக்கவில்லை. இருப்பினும், தமிழக சட்டமன்றத்தின் மாற்று சபாநாயகர் அந்தஸ்து அவருக்கு தரப்பட்டு, அந்த இருக்கையில் அமர்ந்து அவையையும் வழிநடத்தி, மீண்டும் ஒருமுறை வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் சத்தியபாமா.</p>
<p style="text-align: justify;">விரைவில் அவருக்கு வாரியத் தலைவர் போன்ற முக்கிய அரசு பதவி தரப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.</p>
Source: Read Full Article