
<p><strong>Minister Nirmal Kumar On Power Cut:</strong> தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<h2><strong>மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு பிரச்னை</strong></h2>
<p>முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தலைமையிலான <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு அமைந்தது முதலே, அவர்களுக்கு மின்சாரத்துறை ஷாக் அடிக்கும் துறையாகவே அமைந்துள்ளது. தலைநகர் சென்னையிலேயே நள்ளிரவில் ஏற்பட்ட மின்வெட்டு, கட்டணமில்ல 200 யூனிட்டில் குளறுபடி மற்றும் மின்கட்டணம் கணக்கீட்டில் பிரச்னை என அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்தது. கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் தணிந்திருந்த நிலையில், மீண்டும் கிராமப்புற பகுதிகளில் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கியுள்ளது. இதனை கண்டித்து திருவள்ளூர், நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் தர்ணா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலாண்டு தேர்வும் நெருங்கி வரும் சூழலில் மின்வெட்டு பிரச்னையால் மாணவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/why-is-laughing-dangerous-lets-know-details-in-pics-274301" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>ஸ்தம்பிக்கும் தென் மாநிலங்கள்</strong></h2>
<p>திடீரென ஏற்பட்டுள்ள இந்த மின்வெட்டு பிரச்னை என்பது தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. செப்டம்பர் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி செய்யும் அளவை காட்டிலும் மின்சார தேவை அதிகமாக இருப்பதாக மாநில அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு பிராந்திய மின்சுமை அனுப்பும் மையத்தின் தரவுகளின்படி, கிடைக்கக்கூடிய மின்வழங்கல் 56,216 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், பீக் ஹவர்ஸ் தேவையானது 58,778 மெகாவாட்டை எட்டியுள்ளது. இதனால் 3,800 மெகாவாட்டிற்கும் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/g42EiJFzmII?si=A8AoiLfHAvZGEQiC" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>மாநில வாரியான நிலவரம்:</strong></h2>
<p><strong>கேரளா: </strong>மின்பற்றாக்குறையால் தமிழ்நாட்டை காட்டிலும் மிகக் கடுமையான பாதிப்பை கேரளா சந்தித்து வருகிறது. அதிகபட்சமாக சுமார் 14 சதவிகித மின் தட்டுப்பாடு நிலவுவதால், பரவலாக திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.</p>
<p><strong> கர்நாடகா: </strong>காற்றாலை மின் உற்பத்தி 2,000 மெகாவாட்டிற்கும் மேல் குறைந்ததாலும், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும், கர்நாடகாவின் தென்பகுதிகளில் இடையிடையே திட்டமிடப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.<strong><br /></strong></p>
<p><strong>தமிழ்நாடு: </strong>குறைந்தபட்ச உச்சபட்ச பற்றாக்குறை (சுமார் 4.41%) பதிவாகியுள்ளது. உள்ளூர் இடையூறுகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் விநியோகம் போதுமானதாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கிராமப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது.</p>
<p><a title="Brics: 5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?" href="https://tamil.abplive.com/news/india/putins-brics-visit-su-57-super-sukhois-fighter-jets-s-500-on-russias-defence-offer-list-for-india-pm-modi-wish-world-news-274290" target="_self">இதையும் படியுங்கள்: Brics: 5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?</a></p>
<h2><strong>மின்சாரம் கொள்முதல் - அமைச்சர் விளக்கம்</strong></h2>
<p>தேவை உயர்வு, மழை குறைவு, பழைய கட்டமைப்பு மற்றும் சந்தைப் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு தொடர்பாக அரசு விளக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், <strong>“</strong>காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. </p>
<p>நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்”என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.</p>
Source: Read Full Article