
<h2>சென்னை விமான நிலையம்- பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</h2>
<p>சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை விமான நிலையம் ஒரு சாதாரண வணிக நிறுவனம் அல்ல. அது தனிநபர் சொத்தல்ல, மக்களின் பொதுச்சொத்தாகும். நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்பாகும். தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தின் முக்கியமான பங்களிப்பை அது செலுத்துகிறது. சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல், சாலை இணைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். </p>
<h2>சென்னை விமான நிலையம் தனியார்மயம்</h2>
<p>அதைவிடுத்து, விமான நிலையத்தை தனியார்மயமாக்குதல் அதற்கு தீர்வல்ல. AAI நாடு முழுவதும் விமான நிலையங்களை இயக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாயும் லாபமும் ஈட்டி வருகிறது. 2025-26 நிதியாண்டில் கிகிமி-யின் நிகர லாபம் ரூ.6,522 கோடியாக இருந்ததாக அதன் நிதிநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையமும் 2024-25ல் AAI நிர்வகிக்கும் விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டிய விமான நிலையங்களில் இரண்டாவது இடத்தில் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன் லாபம் சுமார் ரூ.492.48 கோடி என தரவுகள் காட்டுகின்றன. அப்படியிருக்க, லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனமான சென்னை விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது அவசியமற்றது.</p>
<h2>சரக்கு போக்குவரத்தில் சாதனை</h2>
<p>பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட, சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பால் கிடைக்கும் வருவாயும், லாபமும் அரசின் பொதுவளமாகத் தொடர வேண்டும். தனியார் நிறுவனத்தின் லாபமாக மாற்றப்படக் கூடாது. சென்னை விமான நிலையம் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்திற்கு முக்கியமான சரக்கு போக்குவரத்து மையமாகும். எனவே, விமான நிலையத்தை, தனியார் லாப நோக்கில் இயக்குவது என்பது, பயணிகள் சேவை தொடர்பான பிரச்சினை மட்டும் அல்ல.அது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் வளர்ச்சி மற்றும் சரக்கு விநியோகச் சங்கிலியுடனும் தொடர்புடைய பிரச்சினையாகும்.</p>
<h2>விமான நிலையம் விரிவாக்கம்</h2>
<p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி ஐந்தாவது முனையத்தை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தப் பயணிகள் கையாளும் திறனை ஆண்டு தோறும் 5.5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 5 வது முனையம் திட்டம் இன்னும் ஆரம்பக் கருத்தாக்க நிலையிலேயே இருப்பதாகவும், முழுமையான தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் AAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br />பொதுத்துறை திட்டமிடப்பட்டு, பொதுமுதலீடு செய்யப்பட்டு, உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அதன் பலனை தனியார் லாபத்திற்கு விடுவது தேசவிரோதச் செயலாகும்.</p>
<h3>பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைத் திரும்பப் பெறுங்க</h3>
<p>விவசாய நிலத்தைப் பாதுகாப்பது மட்டும் பொதுநலன் அல்ல. மாறாக, பொதுச்சொத்து, பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அரசின் வருவாயையும் பாதுகாப்பதே பொதுநலனாகும். தமிழ்நாட்டிற்கு நவீன விமான நிலையம் வேண்டும். பயணிகளுக்கு உலகத்தரமான வசதிகள் வேண்டும். சரக்குப் போக்குவரத்து வேகமாகவும் திறமையாகவும் நடைபெற வேண்டும். விமான நிலையத்தின் திறன் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஆனால் நவீனமயமாக்கலுக்கு தனியார்மயமாக்கல் அவசியம் என்ற வாதத்தை ஏற்க முடியாது.</p>
<p>AAI-யின் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். தேவையான அதிகாரம், முதலீடு, தொழில்நுட்ப வசதி மற்றும் நிர்வாகத் திறன் வழங்கப்பட வேண்டும்.பொதுச்சொத்தை தனியார் லாபத்திற்காக ஒப்படைப்பது வளர்ச்சி அல்ல. பொதுத்துறை விமான நிலையத்தை வலுப்படுத்துவதே மாற்று வழி. தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/tata-curvv-ev-430km-range-full-charging-time-274928" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article