
<h2>ஓய்வூதிய தொகை- காத்திருந்த ஓய்வூதியதாரர்கள்</h2>
<p>சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சுமார் 20 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்படாத காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது. எப்போது ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக அரசு தொடர் முயற்சியின் காரணமாக ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் விடுமுறை நாட்களிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட்ட அறிக்கையில், 11.09.2026 முதல் 14.09.2026 வரையிலான தொடர் விடுமுறை நாட்கள் இருந்தபோதிலும், 19,71,015 பயனாளிகளுக்கு பண்டிகைக் காலத்திற்குள் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட தொகையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இடையே தமிழ்நாடு அரசு விரிவான மற்றும் மிக சிறப்பாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p>
<h2>238.76 கோடி ரூபாய் ஓய்வூதியம்</h2>
<p>தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ் அமல்படுத்தப்படும் மூன்று ஓய்வூதியத் திட்டங்களான -இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ், பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான வழங்கப்படவேண்டிய ஓய்வூதியத் தொகை மொத்தம் ரூ.238.76 கோடி ஆகும்.</p>
<p>இந்திய அரசின் பங்களிப்பு: ₹52.81 கோடி<br />தமிழ்நாடு அரசின் கூடுதல் ஓய்வூதியத் தொகை:₹ 185.95 கோடி<br />மொத்தம்: ₹238.76 கோடி</p>
<h2>தொடர் விடுமுறையால் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்</h2>
<p>தொடர் விடுமுறை நாட்களில் நிறைவேற்றப்பட்ட பல-கட்ட செயல்முறைகள் மேற்கண்ட திட்டங்களின் கீழ் ஓய்வூதியத் தொகை பட்டியல்கள் SNA-SPARSH கொடுப்பனவு முறைமைக்கு மாற்றப்பட்டதன் காரணமாக நடைமுறையில் ஏற்பட்ட மாற்றமே தற்போதைய நிலைமைக்குக் காரணமாக அமைந்தது. தமிழ்நாடு அரசின் முன்மொழிவு தேவையான ஒப்புதல்களுக்காக இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் சார்ந்த ஒப்புதல், நிதி மற்றும் வங்கி சார்ந்த செயல்முறைகள் தொடர் வரிசையில் விரைவுபடுத்தப்பட வேண்டியிருந்தது. கிடைக்கக்கூடிய குறுகிய கால அவகாசத்திற்குள் முழு செயல்முறையையும் நிறைவு செய்வதற்கு ஒவ்வொருகட்டத்திலும் தீவிரமான தொடர்ச்சியான கண்காணிப்பும் ஒருங்கிணைப்பும் தேவைப்பட்டது.</p>
<h2>ஓய்வூதியம்- களத்தில் இறங்கிய அரசு</h2>
<p>மாநில அரசின் தீவிர ஒருங்கிணைப்பு மாநில அளவில், வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநரகம், கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குநரகம் மற்றும் நிதித் துறை ஆகியவை தொடர்ச்சியான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு இதை சாத்தியமாக்கின. தலைமைச் செயலாளர் வழிகாட்டுதலை வழங்கி, தேவையான ஒருங்கிணைப்பும் பின்தொடர்தலும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்த நிலையில், ஒவ்வொரு கட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளபட்டது. </p>
<h3>ஓய்வூதியம்- வங்கி கணக்கில் வரவு வைப்பு</h3>
<p>இவ்வாறு, இந்திய அரசின் ஒப்புதல், PAO அனுமதி, நாக்பூரில் ரிசர்வ் வங்கியின் சிறப்பு ஏற்பாடுகள், கருவூலம் மற்றும் கணக்குகள் செயலாக்கம் மற்றும் NPCI-யின் சிறப்பு கொடுப்பனவு காலஅவகாசம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான தொடர்ச்சியான செயல்முறை, தொடர் விடுமுறை நாட்களில் கிடைத்த குறுகிய கால அவகாசத்திற்குள் நிறைவு செய்யப்பட்டது. இந்தத் துறைகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் இணைந்த மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமே, பண்டிகைக் காலத்திற்குள் தொகை வழங்கப்பட முடிந்தது. தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களை காலந்தாழ்த்தாமல், தடையின்றி மற்றும் இடர்ப்பாடின்றி வழங்குவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/how-long-to-wait-before-driving-after-starting-car-274502" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article