
<p style="text-align: justify;">சென்னை பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், இணைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) புதிய நுழைவு-வெளியேற்ற வழிகளுடன் தடையற்ற சுங்கச்சாவடி முறையை (Barrier-Free Tolling) அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>
<h3 style="text-align: justify;">புதிய நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள்</h3>
<p style="text-align: justify;">சென்னை பைபாஸ் பாதையில் திருநீர்மலை மற்றும் கல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் புதிய அணுகுசாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணி ஆணையை திருநீர்மலை பகுதியில் NHAI ஏற்கனவே வழங்கியுள்ளது. இதன் மூலம் சென்னை விமான நிலையம், மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (MEPZ) மற்றும் நகரின் தென் பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் சுலபமாகப் பயணிக்க முடியும். அதேபோல் அம்பத்தூரில் இருந்து சென்னை-திருவள்ளூர் ரயில் பாதைக்கு வடக்கே உள்ள பகுதிகளுக்கு விரைவாகச் செல்ல கல்லிக்குப்பம் பகுதி அணுகுசாலை உதவும்கல்லிக்குப்பத்தில் ரயில் பாதை குறுக்கிடுவதால் சேவை சாலை பாதியிலேயே முடிவடைந்து, நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்த நிலை இதனால் முடிவுக்கு வரும்.</p>
<h3 style="text-align: justify;">மாற்றிமைக்கப்படும் சுங்கச்சாவடிகள் மற்றும் தடையற்ற கட்டண முறை</h3>
<p style="text-align: justify;">இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய மாற்றமாகத் தற்போது இயங்கி வரும் வானகரம் சுங்கச்சாவடி திருநீர்மலை பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. சூரப்பட்டு சுங்கச்சாவடிக்கு பதிலாக அத்திப்பட்டு (டீகாத்லான் அருகே) மற்றும் மேனாம்பேடு ஆகிய இடங்களில் பரவலான சுங்கக் கட்டண வசூல் அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்த புதிய சுங்கச்சாவடிகள் 'மல்டி லேன் ஃப்ரீ ஃபுளோ' (MLFF) எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தில் இயங்கும் என்பதால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் வழக்கமான வேகத்தில் தடையின்றிச் செல்ல முடியும்.</p>
<h3 style="text-align: justify;">தானியங்கி தொழில் நுட்பமும் பராமரிப்பு உள்கட்டமைப்பும்</h3>
<p style="text-align: justify;">இந்த தடையற்ற அமைப்பில், அதிநவீன உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் தானியங்கி எண் பலகை கண்டறியும் (ANPR) கேமராக்கள் மூலம் வாகனங்களின் ஃபாஸ்டேக் மற்றும் பதிவு எண்கள் ஸ்கேன் செய்யப்பட்டுத் தானாகவே கட்டணம் பிடிக்கப்படும். ஃபாஸ்டேக் வேலை செய்யாத அல்லது தவறுதலாக உள்ள வாகனங்களுக்குப் புகைப்பட ஆதாரத்துடன் மின்-நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய வானகரம் சந்திப்பில் 6 வழி வாகன சுரங்கப்பாதையும், கூவம் ஆற்றின் குறுக்கே கூடுதல் தரைப்பாலமும் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளன.</p>
Source: Read Full Article